Sunday 25 December 2022

வலி, சபலம் மற்றும் மரணம்

(தன் "கிறிஸ்துவின் இறுதி சபலம்" நாவலுக்கு நீகாஸ் கசந்த்சாகீஸ் எழுதிய முன்னுரை)

கிறிஸ்துவின் இரட்டை இயல்பானது எப்போதுமே எனக்கு புரிந்துகொள்ள முடியாத மர்மமாகவே இருந்துள்ளது. கடவுளை அடைவதற்கான அல்லது கடவுளிடம் திரும்பி அவரோடு தன்னை அடையாளப்படுத்துவதற்கான மனிதனின் ஏக்கம் என்பது அடிப்படையான மானுட இயல்பாகவும் அதே நேரம் அதிமானுட அம்சத்துடனும் இருக்கிறது. கடவுளுக்கான நினைவேக்கத்தினை ஒரே சமயத்தில் மர்மமானதாகவும் வெளிப்படையானதாகவும் அறிகிறேன். அது என்னில் பெரிய காயங்களையும் பெருக்கெடுத்து பாயும் வசந்தங்களையும் திறக்கிறது.



இளமையிலிருந்தே என் ஆத்துமாவிற்கும் மாமிசத்திற்கும் நடுவே கருணையற்ற யுத்தம் இடைவிடாமல் நடக்கிறது. அந்த போராட்டமே என் ஆதார வேதனையாகவும், என் மகிழ்ச்சிகளுக்கும் துயரங்களுக்குமான தோற்றுவாயாகவும் இருக்கிறது.

Tuesday 13 December 2022

இடைவெளியும் தொடர்ச்சியும்

1.

 மலையாள விமர்சகர் பி.கெ.பாலகிருஷ்ணன் சிறுகதைக்கும் நாவலுக்குமான வேறுபாடு பற்றி சொல்லும்போது சிறுகதைக்கு ஒரு திட்டவட்டமான வடிவம் இருப்பதால், நல்ல சிறுகதை எழுதுவது எளிது என்றும் நாவல் வடிவமற்ற வடிவம் கொண்டிருப்பதால் அதிலேயே எழுத்தாளனின் மேதமையை கண்டுபிடிக்க முடியும் என்றும் கூறுகிறார். இதுவொரு சுவாரஸ்யமான அவதானிப்பு. சிறுகதை வெவ்வேறு வடிவங்களை தேர்ந்துக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்துக்கு இது பொருத்தமான அவதானிப்பா என்பது வேறு கேள்வி. ஆனால் கட்டாயம் சுவாரஸ்யமான அவதானிப்பு. யோசித்து பார்த்தால் ஆரம்பம் முதலாகவே சிறுகதைகள் சார்ந்து பல்வேறு சூத்திரங்கள் இலக்கியச் சூழலில் நிலைபெற்றிருப்பது ஞாபகம் வருகிறது. சிறுகதை என்பது ஒரே அமர்வில் வாசிக்கும் வகையில் இருக்க வேண்டும் எனும் எட்கர் ஆலன் போவின் புகழ்பெற்ற கூற்று, சிறுகதை என்பது ஒரு சிறு சம்பவம் என புதுமைப்பித்தன் சொன்னது - இப்படி சிறுகதைகள் சார்ந்து தெளிவாக வகுத்தளிக்கப்பட்ட பல வரையறைகள் படிக்க கிடைக்கின்றன. ஒருவிதத்தில் நவீன இலக்கியத்தில் சிறுகதைக்கு மட்டுமே குண அடிப்படையின்றி, வடிவ அடிப்படையில் இலக்கணம் மொழியப்பட்டிருக்கிறது என நினைக்கிறேன். அதனால்தான் சுஜாதாவால்சிறுகதை என்பது ஒரு முரண்பாட்டைச் சித்தரிக்கும் உரைநடை இலக்கியம்என்று வகுத்துக் கொண்டு முரண்பாடுகளையும் திருப்பங்களையும் மட்டுமே முன்னிலைப்படுத்தி பல நல்ல கதைகளையும், பல மோசமான கதைகளையும் ஒரே நேரத்தில் எழுத முடிந்திருக்கிறது.

Wednesday 20 April 2022

குணச்சித்திரன் பராக்

‘உடைந்து எழும் நறுமணம்’ தொகுப்பின் முன்னுரையை இசை இப்படித் தொடங்குகிறார்:  “என் கவிதைகளின் அடையாளமாகச் சொல்லப்பட்ட பகடி இயல்பு சமீபத்திய தொகுதிகளில் படிப்படியாகக் குறைந்து இதில் மேலும் அருகியுள்ளது.” ஒரு கவிஞரின் அடையாளம் ஏன் உருமாறுகிறது? அது முழுக்கமுழுக்க அவருடைய தேர்வுதானா? பொதுப்போக்காக மாறி பகடி சலிப்புத் தட்ட ஆரம்பித்திருக்கும் சூழலில் கவிஞர் தன் அடையாளத்தைத் துறக்க வேண்டியது காலத்தின் நிர்ப்பந்தமா? இப்படி வெவ்வேறு கேள்விகளை கேட்பது சுவாரஸ்யமான விசாரங்களுக்கு வழி வகுக்கும். ஆனால் மற்ற விஷயங்களைக் காட்டிலும், இந்தத் திசைமாற்றம் இசையின் இதுவரையிலான கவிதைகளைத் தொகுத்துப் புரிந்துகொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறது. திருப்பத்தில் நுழைவதற்கு முன்னால் வந்த வழியை ஒருதடவை சரி பார்த்துக் கொள்வதுபோல. மேலும், ஒரு குறிப்பிட்ட கவிஞரின் கவிதைகளைப் புரிந்துகொள்வது என்பது அக்கவிதைகள் உருவாகி நிலைப்பதற்கு காரணமாய் இருக்கக்கூடிய சூழலையும் புரிந்துக்கொள்வதுதான். 


O

நீர்வழி (சிறுகதை)

தண்ணீர் உள்ளே வந்துவிடுமோ என்று பயந்து பயந்து வீட்டுக் கதவை திறக்க வேண்டியிருந்தது. ஓரடிக்கு வாசல் சட்டத்தில் செங்குத்தாக பலகை வைத்து அடைத்திருந்தபோதும் பயம் இருந்தது. மழைநீர் வாசல் படி வரை வந்துவிட்டது. இரவு முழுக்க மழை அப்படிக் கொட்டித் தீர்ந்திருந்தது. மழை ஓய்ந்த அமைதியும் மழையையே நினைவூட்டியது. சிறுவன் பலகையை தாண்டி வீட்டைவிட்டு வெளியே வந்து தண்ணீரில் இறங்கினான். அரைக்கால் சட்டை போட்டிருந்ததால் நீரின் சில்லிடும் குளுமை அவன் கால் மயிர்களை சிலிர்க்க வைத்தது. படியில் இறங்கி சாலைக்கு வந்தபோது முட்டிக்காலுக்கு மேலே தண்ணீர் போனது. அவன் கூசியபடி சிரித்து அம்மாவை பார்த்தான். புடவையை லேசாக உயர்த்தி பிடித்தபடி காலைத் தூக்கி பலகையை கடந்து அம்மாவும் தண்ணீரில் இறங்கினாள். வீட்டைப் பூட்டிவிட்டு சிறுவன் கையை பிடித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினாள். ஏரி வளர்ந்து அப்பகுதி தெருக்களை பாதி மூழ்கடித்திருந்தது. வீடுகள் தண்ணீரில் புதைந்திருந்தன. சாலையும் முங்கியிருந்தது. நிலம் கீழே நீரை உறிந்துத் தீர்க்க முயன்றுக் கொண்டிருந்தது. அம்மா ஒவ்வொரு அடியையும் ஜாக்கிரதையாக எடுத்து வைத்தாள். தண்ணீரில் என்னென்னவோ மிதந்து வந்தன. காட்டாமணி செடியின் பழுத்த இலை. பழையத் துணி. மரத் துண்டு. ஆளில்லாத தெர்மக்கோல் படகு. சிறுவன் அதை எட்டி பிடிக்க முயன்று தண்ணீரை வாத்துப் போல் அறைந்தான். தடுமாறி கிழே விழப் பார்த்தவனை அம்மா தூக்கி நிறுத்தினாள்.   

Friday 25 February 2022

ஒளி மின்னும் பொருட்கள் 15 - விடையருளப்படும் பிரார்த்தனை (அன்னா காமியன்ஸ்கா)

 செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “பற்றறுத்தல்” (non attachment) எனும் பிரிவில் போலீஷ் கவிஞரான அன்னா காமியன்ஸ்காவின் (1920-1986) “விடையருளப்படும் பிரார்த்தனை” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. 

o

என் வலைத்தளத்தில் வெளியான கவிதை மொழிபெயர்ப்புத் தொடர் இத்துடன் முடிவு பெறுகிறது. கடைசி கவிதை பிரார்த்தனையாக இருப்பதே இயற்கை. 

o

“அன்னா காமியன்ஸ்கா ஒரு கிறிஸ்தவர். பழைய ஏற்பாட்டோடும் புதிய ஏற்பாட்டோடும் வாழ்க்கையை ஆழமாய் முடிச்சிட்டுக் கொண்டவர். தன் முதிய வயதில் அவர் கூடுதல் அமைதியையும் கடவுள் உருவாக்கிய உலகின் மீதான ஏற்பையும் அடைந்தார். இதை மிக நல்ல கவிதையாய் நான் கருதுகிறேன்” – செஸ்லா மிலோஷ்


Friday 18 February 2022

ஒளி மின்னும் பொருட்கள் – 14 - எர்னஸ்ட் ஹெமிங்வேயிற்கு ஓர் இரங்கற்பா (தாமஸ் மெர்டன்)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “மக்கள் மத்தியில் மக்கள்” (people among people) எனும் பிரிவில் அமெரிக்க டிராப்பிஸ்ட் துறவியான தாமஸ் மெர்டனின் "எர்னஸ்ட் ஹெமிங்வேயிற்கு ஓர் இரங்கற்பா" கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. 

"அமெரிக்க தேசம் கென்டக்கி மாகாணம் கெத்செமினே டிராப்பிஸ்ட் மடாலயத்தில் துறவியாக சேர்வதற்கு முன்பாகவே தாமஸ் மெர்டன்  எழுத்தாளராக இருந்தவர். எனவே தன் தலைமுறையின் எழுத்து நடையை வடிவமைத்த முன்னோடிகள் மேல் இயல்பாகவே அவருக்கு மரியாதை இருந்தது. உரைநடையில் மெர்டன் மேல் தீவிரப் பாதிப்பை செலுத்திய எர்னஸ்ட் ஹெமிங்வே அறுபத்தி மூன்று வயதில் தற்கொலை செய்து இறந்தார். அப்போது ஹெமிங்வேயின் ஆன்மாவுக்கு மெர்டன் செலுத்திய அஞ்சலி என்பது தன் இளமைப் பருவத்துக்கு அவர் கூறிய பிரிவு விடையும்கூட. அப்படியாக 'நான்' எனும் சாகசக்காரனுக்கு அவர் விடை கொடுத்தார். அந்த 'நான்' எனும் நபரிடமிருந்து தப்புவதற்காகத்தான், அவர்  மடாலயத்தில் புகலிடமே தேடினார்" - செஸ்லா மிலோஷ்


Tuesday 15 February 2022

ஒளி மின்னும் பொருட்கள் 13 – நான் தீயை அஞ்சுகிறேன் (அன்னா ஸ்விர்)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “வரலாறு” (history) எனும் பிரிவில் போலீஷ் கவிஞரான அன்னா ஸ்விர்ரின் (1909 – 1984) “நான் தீயை அஞ்சுகிறேன்”கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. எளிமையான குறுங்கவிதைகளை தேர்வு செய்து சிறிய எண்ணிக்கையில் நான் செய்திருக்கும் இந்த மொழிபெயர்ப்புகளில், அன்னா ஸ்விர் மட்டும் மூன்று தடவை இடம்பெற்றிருக்கிறார். இந்த புத்தகம் வழியே நான் கண்டுகொண்ட, எனக்கு மிக நெருக்கமாக தோன்றுகிற கவிஞர் அவர். 

“வார்சா நகரில் தீ பற்றிக் கொள்கிறது. முதலில் ஜெர்மானியர்கள் உருவாக்கிய கெட்டோவையும் பிறகு மீதி நகரையும் தீ விழுங்குகிறது. தீ பற்றிய தெருக்கள் வழியே ஒரு பெண் தனியாக ஓடுவது தன்னளவிலேயே ஓர் உருவகம். கட்டுப்படுத்தும் சூழ்நிலைக்கான உருவகம்” – செஸ்லா மிலோஷ்


Friday 11 February 2022

ஒளி மின்னும் பொருட்கள் 12 – மகத்தான சிகரம் (முசோ சொசெகி)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “பொருளின் ரகசியம்” (secret of a thing) எனும் பிரிவில் ஜென் துறவியான ஜப்பானிய கவிஞர் முசோ சொசெகியின் (1275-1351) “மகத்தான சிகரம்” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது.  

“பல்வேறு மொழி கவிதைகளிலும் , எவ்வளவு தூரத்துக்கு, மலைகள் திரும்ப திரும்ப இடம்பெற்றபடி உள்ளன என்பது ஆச்சர்யத்திற்குரிய விஷயம். விவிலியத்திலேயே இது ஆரம்பமாகிவிட்டது. சிந்திப்பதற்குரிய புனித இருப்பாகவே மலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன. மலைகளின் தனித்த இருப்பு, மனித மனதின், உணர்ச்சிகளின் கலைந்து விலகும் தற்காலிக நிலைக்கு எதிரானதாய் உள்ளது” – செஸ்லா மிலோஷ்

Tuesday 8 February 2022

ஒளி மின்னும் பொருட்கள் 11 – அவளுக்கு ஞாபகம் இல்லை (அன்னா ஸ்விர்)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “பெண் சருமம்” (woman’s skin) எனும் பிரிவில் போலீஷ் கவிஞரான அன்னா ஸ்விர்ரின் (1909 – 1984) “அவளுக்கு ஞாபகம் இல்லை” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது.  

“பாவச் செயல்களை மனிதர்கள் கடக்கக்கூடிய பருவங்களாக எண்ணும் வில்லியம் பிளேக், அவற்றை உறுதியான இருப்பாக கருதவில்லை. அதே போன்ற கருணையும் மன்னிப்பும் அன்னா ஸ்விர்ரின் இந்த கவிதையிலும் உள்ளது” – செஸ்லா மிலோஷ்


Friday 4 February 2022

ஒளி மின்னும் பொருட்கள் 10 – மீனவன் (ஹீ யாங் ஷூ)

 செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “இடங்கள்” (places) எனும் பிரிவில் சீனக் கவிஞரான ஹீ யாங் ஷூவின் (1007 – 1072) “மீனவன்” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது.  

“இந்த புத்தகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் சீனக் கவிதைகள் இடம்பெற்றுள்ளன. அதற்கு காரணம், சீனக் கவிதைகளில் உள்ள காட்சித் தன்மையே. ஓவியருக்கும் கையெழுத்துக் கலைஞருக்கும் அணுக்கமான விதத்தில் அவற்றில் காட்சிகள் வெளிப்படுத்தப் பட்டுள்ளன. ‘மீனவன்’ கவிதை உண்மையாகவே ஓர் ஓவியம் போலத்தான் இருக்கிறது. சீனக் கலை சார்ந்த நூல்களில், இந்த கவிதை, தூரிகையால் மொழிபெயர்க்கப்படு பல தடவை ஓவியமாக பிறப்பெடுத்துள்ளது. தூறலும் பனியும், தெளிவான பார்வைக்கு தடையாய் மாறுகின்றன. இதன் மூலம் காட்சியை பார்த்துக் கொண்டிருக்கும் ஒருவர் – அவதானிப்பவர்- அங்கே இருக்கிறார் என்பது நமக்கு நினைவூட்டப்படுகிறது” – செஸ்லா மிலோஷ்

Wednesday 2 February 2022

ஒளி மின்னும் பொருட்கள் 9 – பேச்சு (வில்லியம் ஸ்டான்லி மெர்வின்)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “மக்கள் மத்தியில் மக்கள்” (people among people) எனும் பிரிவில் அமெரிக்க கவிஞரான வில்லியம் ஸ்டான்லி மெர்வினின் (1927 – 2019) “பேச்சு” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது.  

“வாழ்வின் எல்லா தருணங்களிலும் நாம் மானுடத்தின் கடந்தகாலத்தோடு பிணைக்கப்பட்டிருக்கிறோம். மானுடத்தின் கடந்த காலம் என்பது முதன்மையாக மொழியே. எனவே, பின்னனியில் இடைவிடாது ஒலிக்கும் கூட்டுக் குரல்களுடனே நாம் வாழ்ந்து வருவதால், இதுவரை பேசப்பட்ட அனைத்து விஷயங்களின் இருப்பையும் கற்பனை செய்வது சாத்தியமானதே ” – செஸ்லா மிலோஷ்


Tuesday 1 February 2022

ஒளி மின்னும் பொருட்கள் 8 – கவிதை வாசிப்பு (அன்னா ஸ்விர்)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “சூழ்நிலை” (situation) எனும் பிரிவில் போலீஷ் கவிஞரான அன்னா ஸ்விர்ரின் (1909 – 1984) “கவிதை வாசிப்பு” சேர்க்கப்பட்டுள்ளது.  



வெவ்வேறு காலக்கட்டங்களை சேர்ந்த வெவ்வேறு கவிஞர்களை மிலோஷ் தன் நூலில் தொகுத்திருக்கிறார். மேற்கத்திய படைப்புகள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றிருந்தாலும் சீனம் ஜப்பான் போன்ற கீழைத்தேய நாடுகளிலிருந்தும் கணிசமான அளவில் கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. லாவோ ட்சு, ரூமி போன்ற பண்டையக் குரல்களில் தொடங்கி நவீன ஆளுமைகளான வாலேஸ் ஸ்டீவன்ஸ், தாமஸ் டிரான்ஸ்ட்ரோமர் வரை நீளும் கவிஞர்களை வாசிக்கும்போது சமயங்களில் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. நூறு நூறு வருஷங்கள் வெட்டி வெட்டி மறையும்போது உண்டாகும் திணறல் அது.  அல்லது ஒரே இடத்தில் நூற்றாண்டுகளாக இருப்பதன் திணறல்.

Monday 31 January 2022

ஒளி மின்னும் பொருட்கள் 7 – மணற் துகளோடு நிகழும் பார்வை (விஸ்லவா ஷிம்போர்ஸ்கா)

 செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “பொருளின் ரகசியம்” (the secret of a thing) எனும் பிரிவில் போலீஷ் கவிஞரான விஸ்லவா ஷிம்போர்ஸ்காவின் (1923 – 2012) “மணற்துகளோடு நிகழும் பார்வை” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. விஸ்லவா ஷிம்போர்ஸ்கா 1996ம் வருடம் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவர்.

செஸ்லா மிலோஷ் தன் மனதுக்கு நெருக்கமான கவிதைகளை மட்டுமே இந்த புத்தகத்தில் தொகுத்திருக்கிறார் என்று சொல்ல முடியாது. கவிதையின் வெவ்வேறு ரூபங்களை அடையாளம் காட்டும் நூல் என்றே இதை அடையாளப்படுத்த வேண்டும். ஆகவே, தேர்வு செய்திருக்கும் கவிதை மீது விமர்சனம் இருந்தால் அதை மிலோஷ் தன் சிறுகுறிப்பில் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. நவீனத்துவ தொழில்நுட்பம் மேல் தனக்கு நம்பிக்கை இல்லை என ஓர் இடத்தில் அவர் சொல்வது நல்ல உதாரணம். ஷிம்போர்ஸ்காவின் கவிதையில் வெளிப்படும் நான், மற்றமை எனும் பிரிவினையை கூர்மையாகத் தொட்டுக் காட்டியிருக்கிறார் மிலோஷ். “இதுதான். இப்படித்தான்” என்று வரையறுப்பது சில நேரங்களில் வன்முறை. “இது இல்லை. இப்படி இல்லை” என்பது வேறு சில நேரங்களில் வன்முறை. 

o

“இலக்கிய வகைமைகளுக்கு நடுவிலான எல்லைக் கோடு மங்கலாகும்படி ,இருபதாம் நூற்றாண்டில் கவிதை, ஒரு திசையில், தத்துவக் கட்டுரைகளின் இடம் நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. கருத்துருவமாவது கவிதைக்கு ஆபத்து என்றாலும் இந்த போக்கு பிரபஞ்சத்தின் கட்டுமானம் பற்றிய அடிப்படைக் கேள்விகளை கேட்பதற்கு வழி செய்திருக்கிறது. விஸ்லவா ஷிம்போர்ஸ்காவின் கவிதை மனிதனை (அதாவது மொழியை) ஜடப்பொருட்களின் உலகுக்கு எதிர் நிலையில் நிறுத்துவதன் வழியே நம் புரிதலை மாயை என்கிறது. தனிப்பட்ட முறையில், விஸ்லவா ஷிம்போர்ஸ்கா மிகவும் அறிவியல்பூர்வமாக சிந்திப்பதாகவும், நாம் அந்த அளவுக்கு பொருட்களிடமிருந்து பிரிந்து இருக்கவில்லை என்றும் நான் எண்ணுகிறேன்” – செஸ்லா மிலோஷ்



Saturday 29 January 2022

ஒளி மின்னும் பொருட்கள் 6 – பெருங்கால்வாயின் வழியே (ஷின் க்வான்)

 செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “பயணம்” எனும் பிரிவில் சீனக் கவிஞரான ஷின் க்வானின் (1049 – 1101) “பெருங்கால்வாயின் வழியே” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. 

“நீர் வழி பயணமானது மற்ற வகை பயணங்களைவிட காலத்தால் மூத்தது. எனவே, கப்பல் பயணத்திற்கு கவிதையில் முக்கியமான இடம் இருக்கிறது. நதிகளுக்கும் கால்வாய்களுக்கும் சீனாவில் உள்ள முக்கியத்துவத்துக்கு சாட்சியாக சீன கவிதையிலும் கப்பல் பயணம் இடம்பெற்றுள்ளது” -செஸ்லா மிலோஷ்

பெருங்கால்வாயின் வழியே

என் சிறிய படகின்
மேற்தளத்தில்
பனித் தூவல்கள் உறைந்திருக்கின்றன
தண்ணீர்
தெளிந்தும் அசைவற்றும் இருக்கிறது
எண்ணிலடங்கா குளிர் நட்சத்திரங்கள்
படகுடன் நீந்தி வருகின்றன
அடர்த்தியான நாணற் புதர் கரையை மறைத்திருக்கிறது
பூமியினையே கடந்துவிட்டதாக நீங்கள் நினைக்கக்கூடும்
அப்போது திடீரென்று கேட்கத் தொடங்குகின்றன
சிரிப்பும் பாடலும்


Friday 28 January 2022

ஒளி மின்னும் பொருட்கள் 5 – காட்டு வாத்துகள் (மேரி ஆலிவர்)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில்“இயற்கை” எனும் பிரிவில் அமெரிக்க கவிஞரான மேரி ஆலிவரின் (1935 – 2019) “காட்டு வாத்துகள்” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. இயற்கையை மையப்படுத்தி தன் கவியுலகை சமைத்துக் கொண்டவர் மேரி ஆலிவர்.

“இருபதாம் நூற்றாண்டு இலக்கியத்தில் எண்ணற்று பதிவான மறுப்புவாத (nihilism) அனுபவங்களை பார்க்கையில், இயற்கையுடனான தொடர்பையும் அதன் வழியே மனிதர்கள் உணர்ந்துகொள்ளும் ஞானத்தையும் ஒருவர் பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த அனுபவங்களுக்கு தர்க்கபூர்வமான விளக்கங்கள் கிடையாது. பிரபஞ்சமயமான ஒரு தாளத்தை உணர்ந்துகொள்வதே இதில் மிக முக்கியமானது. நாமும் அந்த தாளத்தில் ஒரு பகுதியே. அதற்கு நம் ரத்தவோட்டத்துக்கே நாம் நன்றி சொல்ல வேண்டும். மேரி ஆலிவரின் இந்த கவிதையில் நன்மை, தீமை, குற்றவுணர்ச்சி, மனக்கசப்பு எல்லாமே மனித உலகுக்குரியவையாக உள்ளன.  அதற்கப்பால் உள்ள இன்னோர் அகன்ற உலகம் தன் இருப்பையே மானுடத் துயரங்களை கடப்பதற்கான அழைப்பாக மாற்றியிருக்கிறது” - செஸ்லா மிலோஷ்

Mary Oliver

Thursday 27 January 2022

ஒளி மின்னும் பொருட்கள் 4 – அறிவிப்பு (ஸ்டீவ் கொவிட்)

 செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “மக்கள் மத்தியில் மக்கள்” (people among people) எனும் பிரிவில் அமெரிக்க கவிஞரான ஸ்டீவ் கொவிட்டின் (1938 –2015) “அறிவிப்பு” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது.

“நாம் உணர்வதையே பிறரும் உணரும்படிக்கு மனித உணர்ச்சிகள் பொதுவாய் இருப்பதால், தனித்தன்மையின் பிரிவினை வழியே நம்மை மூடிவைத்துக் கொள்வது தவறு என்பதற்கும் நாம் ஒவ்வொருவரும் நம் சகமனிதரை போன்றவரே என்கிற அறிதலுக்கும் என்ன அர்த்தம்? அதன் பொருள் , தவிர்க்க முடியாத அடிப்படை நியதியான நம் மரணத்தை, அந்த பொது விதியை சிறுதருணத்திலாவது நம்மால் கூர்மையான முறையில் அனுபவத்தில் உணர முடிகிறது என்பதே ஆகும். கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த கவிஞர் ஸ்டீவ் கொவிட், நகைச்சுவையான இந்த தீவிரக் கவிதையில் வசப்படுத்தியிருக்கும் விஷயம் மிக வெளிப்படையானது. ஆனால் அரிதாக மட்டுமே வசப்படுவது.” – செஸ்லா மிலோஷ்


Wednesday 26 January 2022

ஒளி மின்னும் பொருட்கள் 3 – ஓர் ஏழை மூதாட்டிக்கு (வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ்)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “மக்கள் நடுவே மக்கள்” (people among people)  எனும் பிரிவில் அமெரிக்க நவீனத்துவ கவிஞரான வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸின் (1883 – 1963) “ஓர் ஏழை மூதாட்டிக்கு” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. கார்லோஸ் வில்லியம்ஸ் படிமக் கவிதைகளுக்காக புகழ்பெற்றவர். வெளிப்பாட்டில் நேரடித் தன்மை. உணர்ச்சி மிகாத சிக்கனமான மொழி. ஒற்றை படிமம் வழியே தன் சாரத்தை வெளிப்படுத்துவது. இவற்றை படிமக் கவிதைகளின் பொது குணாம்சங்கள் எனலாம்.  

“வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் அமெரிக்க கவிதையையே மாற்றியமைத்தார் என்று சொல்வது உண்மையான கருத்தே. சமகால பேச்சு மொழியிலிருந்து தனக்குரிய தனி வடிவத்தை அவர் கண்டடைந்தார். அதன் அறிமுகமே அமெரிக்க கவிதையை மாற்றியது. கிட்டத்தட்ட சுவாசத்தின் தாளத்தை அடிப்படையாக கொண்டது அவர் மொழி. அதை விட முக்கியமானது, மக்கள் நடுவே வாழ்வதற்கு கார்லோஸ் வில்லியம்ஸ் கொண்டிருந்த விருப்பம். அந்த குணம் அவருக்கு அளிக்கப்பட்ட கொடை. பரிவுணர்ச்சியின், பச்சாதாபத்தின் அடிப்படையில் அவரை வால்ட் விட்மனின் வாரிசு என்று சொல்லலாம். ஒருவேளை அதனால்தான் தன் பிறப்பிடமான ரூதர்போர்ட், நியூ ஜெர்சியிலேயே மருத்துவராய் பணி புரிய அவர் விரும்பினார் போலும். அவர் எல்லாவற்றையும் பார்க்கக்கூடியவராகவும் கவனிக்கக்கூடியவராகவும் அவதானிப்பவராகவும் இருந்தார். யதார்த்தம் பற்றிய தன் குறிப்புகளை எழுத ஆக எளிமையானச் சொற்களை தேர்வு செய்யவே அவர் எப்போதும் முயன்றார்” - செஸ்லா மிலோஷ்


Monday 24 January 2022

ஒளி மின்னும் பொருட்கள் 2 – இரண்டு பேரிக்காய்கள் பற்றிய ஆய்வு (வாலேஸ் ஸ்டீவன்ஸ்)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “பொருளின் ரகசியம்” (secret of a thing)  எனும் பிரிவில் அமெரிக்க நவீனத்துவ கவிஞரான வாலேஸ் ஸ்டீவன்ஸின் (1879 – 1955) “இரண்டு பேரிக்காய்கள் பற்றிய ஆய்வு” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது.

“அறிவியல்மீதும், அறிவியல் முறைமைகள்மீதும் பற்றுதல் கொண்டிருந்தவர் வாலேஸ் ஸ்டீவன்ஸ்.  யதார்த்தம் சார்ந்த அவருடைய கவிதைகளில் ஓர் ஆராய்ச்சி பார்வை தென்படுகிறது. ஒரு பொருளை மின்னல் வெட்டில் கைப்பற்ற முயன்ற ஜென் கவிஞர் பாஷோவின் அறிவுரைக்கு நேரெதிரானது இது. இரண்டு பேரிக்காய்களை, ஏதோ வேற்றுலகப் பொருள் போல், விவரிக்க முயற்சிக்கும் ஸ்டீவன்ஸ் அவற்றின் அடிப்படை பண்புகளை ஒவ்வொன்றாக பட்டியலிடுகிறார். ஒரு கியூபிச பாணி ஓவியத்துக்கு நெருக்கமாக தன் ஆராய்ச்சியை முன்வைக்கிறார். எனினும் பேரிக்காய்கள் விவரிக்க முடியாத பொருளாகவே எஞ்சுகின்றன” செஸ்லா மிலோஷ்

வாலேஸ் ஸ்டீவன்ஸ்

Sunday 23 January 2022

ஒளி மின்னும் பொருட்கள் 1 – மேக்சிமஸ் (டி.எச்.லாரன்ஸ்)

ஒளி மின்னும் பொருட்களின் நூல் எனும் தலைப்பில் போலீஷ் அமெரிக்க கவியான செஸ்லா மிலோஷ் (1911 - 2004) வெவ்வேறு உலக மொழிகளில் இருந்து கவிதைகளை தேர்ந்தெடுத்து ஒரே புத்தகமாக தொகுத்து அளித்துள்ளார். ஒவ்வொரு கவிதைக்கும் மிலோஷ் அவர்களே சில வரிகளில் குறிப்பும் கொடுத்திருக்கிறார். செஸ்லா மிலோஷ் 1980ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவர். மெய் வெளிப்பாடு, பயணம், தருணம், விடைபெறல் என்று பல உபதலைப்புகளில் இக்கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

O
மெய் வெளிப்பாடு (epiphany) எனும் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள பிரிட்டிஷ் ஆசிரியர் டி.எச்.லாரன்ஸின் (1885-1930) "மேக்சிமஸ்" கவிதை பற்றிய மிலோஷின் குறிப்பு.

“டி.எச்.லாரன்ஸ் தன் மேக்சிமஸ் கவிதை வழியே பல்வகைப்பட்ட கடவுள்களின் உலகுக்கு திரும்புகிறார். கிரேக்கத் தொன்மமான ஹெர்ம்ஸ் நம்மை நேரில் வந்து சந்திப்பதுப் போன்ற திடுக்கிடலை, அவரை அடையாளம் கண்டுகொண்ட அதிர்ச்சியை இக்கவிதை ஏற்படுத்துகிறது. அந்த அளவுக்கு இக்கவிதை ஆற்றல் மிக்கதாய் உள்ளது. மேக்சிமஸ், ரோமானிய பேரரசர் ஜீலியனின் ஆசிரியராய் இருந்த ஒரு தத்துவவாதி. பண்டைய பாகன் வழிபாட்டு முறையை மறுநிர்மாணம் செய்ய முயன்றதால் நம்பிக்கை பிறழ்ந்தவர் (apostate) என்று அழைக்கப்பட்டார் மேக்சிமஸ்.