செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “பொருளின் ரகசியம்” (the secret of a thing) எனும் பிரிவில் போலீஷ் கவிஞரான விஸ்லவா ஷிம்போர்ஸ்காவின் (1923 – 2012) “மணற்துகளோடு நிகழும் பார்வை” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. விஸ்லவா ஷிம்போர்ஸ்கா 1996ம் வருடம் இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவர்.
செஸ்லா மிலோஷ் தன் மனதுக்கு நெருக்கமான கவிதைகளை மட்டுமே இந்த புத்தகத்தில் தொகுத்திருக்கிறார் என்று சொல்ல முடியாது. கவிதையின் வெவ்வேறு ரூபங்களை அடையாளம் காட்டும் நூல் என்றே இதை அடையாளப்படுத்த வேண்டும். ஆகவே, தேர்வு செய்திருக்கும் கவிதை மீது விமர்சனம் இருந்தால் அதை மிலோஷ் தன் சிறுகுறிப்பில் சுட்டிக்காட்டத் தவறுவதில்லை. நவீனத்துவ தொழில்நுட்பம் மேல் தனக்கு நம்பிக்கை இல்லை என ஓர் இடத்தில் அவர் சொல்வது நல்ல உதாரணம். ஷிம்போர்ஸ்காவின் கவிதையில் வெளிப்படும் நான், மற்றமை எனும் பிரிவினையை கூர்மையாகத் தொட்டுக் காட்டியிருக்கிறார் மிலோஷ். “இதுதான். இப்படித்தான்” என்று வரையறுப்பது சில நேரங்களில் வன்முறை. “இது இல்லை. இப்படி இல்லை” என்பது வேறு சில நேரங்களில் வன்முறை.
o
“இலக்கிய வகைமைகளுக்கு நடுவிலான எல்லைக் கோடு மங்கலாகும்படி ,இருபதாம் நூற்றாண்டில் கவிதை, ஒரு திசையில், தத்துவக் கட்டுரைகளின் இடம் நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது. கருத்துருவமாவது கவிதைக்கு ஆபத்து என்றாலும் இந்த போக்கு பிரபஞ்சத்தின் கட்டுமானம் பற்றிய அடிப்படைக் கேள்விகளை கேட்பதற்கு வழி செய்திருக்கிறது. விஸ்லவா ஷிம்போர்ஸ்காவின் கவிதை மனிதனை (அதாவது மொழியை) ஜடப்பொருட்களின் உலகுக்கு எதிர் நிலையில் நிறுத்துவதன் வழியே நம் புரிதலை மாயை என்கிறது. தனிப்பட்ட முறையில், விஸ்லவா ஷிம்போர்ஸ்கா மிகவும் அறிவியல்பூர்வமாக சிந்திப்பதாகவும், நாம் அந்த அளவுக்கு பொருட்களிடமிருந்து பிரிந்து இருக்கவில்லை என்றும் நான் எண்ணுகிறேன்” – செஸ்லா மிலோஷ்