Saturday 21 October 2017

குளிர்

எதிர்பார்க்காத குளிர். இன்று விடியற்காலை சென்னை வந்திறங்கியது முதல் உடல் குளிரில் நடுங்கி உதறியபடியே இருக்கிறது. நான் அணிந்திருந்தது அரைக்கை சட்டை வேறு. முழங்கைகளை பிணைத்துக் கட்டினால் உள்ளங்கை ஜில்லிட்டு கூசியது. ரயில் நிலையத்தில் கூட்டம் இல்லை. ரயில் வருகிறதா என்று தண்டவாளத்தோடு பார்த்தேன். கண் தூரம் வரைக்கும் வானம் இருள் பரப்பாக தாழ்ந்திருந்தது. அடுத்த ரயில் எப்போது என்று பயணச் சீட்டு கொடுக்குமிடத்திற்கு பக்கத்தில் இருந்த பெரிய நேர அட்டவணையில் தேடினேன். இன்னும் அரை மணி நேரம் இருந்தது. சோர்வுடன் கையில் பிடித்திருந்த துணிப்பையை கீழே வைத்தேன்.


குளிர் குறைவதுப் போல் தெரியவில்லை. பையில் அவசரத்திற்கென்று வைத்த ஒரு குளிர் சால்வை உண்டு.  ஆனால் அதை தேடி எடுக்க வேண்டும். துவைக்காத அழுக்குத் துணிகள் சுருட்டிக் கிடக்கும் பையை பிரித்து துழாவுவதற்கு அசூயையாக இருந்தது.

குளிர் பொறுக்காமல் சூட்டிற்காக கைகளை உரசி கன்னத்தில் வைத்தேன். பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. ரயில் நிலையத்திற்கு பின்னால் , சந்தை தெருவில் கடை வாசல்கள் தோறும் கூட்டி பெருக்கி நீர் தெளித்துக் கொண்டிருந்தார்கள்.  சாலைக்கு மறுபக்கம் இருந்த பால் கடையில் அப்போதுதான் பால் வரத்து நிகழ்ந்துக் கொண்டிருந்தது. லாரியில் வந்த பால் டப்பாக்களை இறக்கி வைத்து வரிசையாக அடுக்கிக் கொண்டிருந்தார்கள். இன்னொருபக்கம் இறக்கிய டப்பாக்களை பையன்கள் வேகமாக சைக்கிளில் ஏற்றி வீடுகளுக்கு கொடுக்க விரைந்து கொண்டிருந்தார்கள். கடை முதலாளி போலிருந்தவர் ஒவ்வொரு டப்பாவையும் கணக்கெடுத்து ஒரு சின்ன சீட்டில் குறித்துக் கொண்டிருந்தார். அந்த கடையைத் தவிர சுற்றி வேறெங்கும் பெரிதாக சலனம் இல்லை.