Sunday 29 December 2019

சாட்சி [சிறுகதை] - 4


அசுவாரஸ்யமாக போய்க் கொண்டிருந்த பேட்டியில் அப்படியொரு திருப்பம் வரும் என்று யாருமே கற்பனை செய்திருக்க மாட்டார்கள். யோவான் திடீரென்று இருக்கையை விட்டு எழுந்து உருக்கமான பிரசங்கம் போல் தன்போக்கில் பேசத் தொடங்கிவிட்டான். இம்மான் தொகுப்பாளரையும் இயக்குனரையும் பார்த்தான். அவர்கள் முகம் பீதியோடிருந்தது. தன் முகமும் அப்படிதான் இருக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான். காமிரா எல்லாவற்றையும் பதிவு செய்துக் கொண்டிருந்தது.

தொகுப்பாளர் கடைசியாய் கேட்ட கேள்வி. “உங்களுக்கு மாய பென்சில் கிடைத்தால் என்ன வரைவீர்கள்?”.

யோவான் அதற்குள் தன்னை இழந்திருந்தான். அவனே அதை எதிர்பார்த்திருக்கவில்லை. அவனுள் ஏற்கனவே தேங்கியிருந்த ஏமாற்றம், இப்போது வெளியே எல்லா இடங்களிலும் பதியலாகிற்று. தொகுப்பாளருடைய போலியான இனிமை எரிச்சல் மூட்டியது. அவனுக்கு எல்லாமே மலினமானவையாக தோன்றின. அரங்கின் பிரகாசமான வெளிச்சம்.  பச்சை விரிப்பு. ஏசி குளிர். அங்கு உலவிய நறுமணம். எதுவுமே இயல்பானதாக இல்லை. அறை வாசனை பாஸ்டர் டேனியலை ஞாபகப்படுத்தியது. பாஸ்டரின் இறுகிய சொற்கள். தண்டனை. அப்பா. சிகரெட் புகை. இருள். உடல். செம்புள்ளிகள் மினுங்கும் மென்சருமம். பிளவுண்ட காயம். இரத்தம். சிவப்பு நிறம். மது. அருள் ஜோசப். இரத்த வாடை. பிசாசு. அற்புதம். மாலா. தழும்பு.நெருப்பு. தண்ணீர். ஞானஸ்நானம். குழந்தை. பேதமை. இழப்பு. செல்வன். தேவாலயம். ஜெபமாலை. அம்மா. சிலுவை. இரத்தம். தச்சன்மகனின் துயர் மிகுந்த அழைப்பு. எலோயி. அவன் மனம் ஒரு முடிவடையாத வலிச் சுழலில் சிக்குண்டது. நேற்றிரவு வீடு திரும்பியபோதே அவனால் பைபிள் வாசிக்கவோ அல்லது ஜெபம் மேற்கொள்ளவோ இயலவில்லை. இயலாமையையும் ஏக்கத்தையும் குடித்தபடி அவனுள்ளே என்னவோ வளர்ந்துக் கொண்டிருந்தது. அது இப்போது வெளிப்பட்டது.

உங்களுக்கு மாய பென்சில் கிடைத்தால் என்ன வரைவீர்கள்?”

இம்மானை நோக்கி கேட்கப்பட்ட கேள்வி. ஆனால் யோவான் குறுக்கிட்டு அழுத்தமாகசிலுவை. சிலுவைதான் வரைய வேண்டும். சிலுவை சுமக்கும் சீஷர்களுக்கே கிறிஸ்து அழைப்பு விடுத்தார்என்றான்.

இம்மான் அதிர்ச்சியில் செயலிழக்க, யோவான் எழுந்து நின்று ஆவேசமாக பேசத் தொடங்கினான். காலர் மைக் உரசி அவ்வப்போது இரைச்சல் எழுந்தது. அவன் பேசுவதை முழுமையாக உள்வாங்க முடியவில்லை. பழி கூறுவது போலவும் எச்சரிக்கை செய்வது போலவும் இருந்தது. அதே நேரம் பிரார்த்தனைப் போலவும் மன்னிப்புக் கோரல் போலவும் ஒலித்தது. திரும்ப திரும்பஉலகமும் அதன் இச்சையும் ஒழிந்துபோம்என்றான்.  தொகுப்பாளரிடமும் இயக்குனரிடமும் பழைய பீதி அகன்று ஒருவித குறுகுறுப்பு மேலிட்டிருந்தது. அவர்கள் யோவானை கட்டுபடுத்த முயற்சிக்கவில்லை. காமிரா மேன் லென்ஸை மாற்றி தொடர்ந்து பதிவெடுத்துக் கொண்டிருந்தார். இம்மான் யோவானை சமாதானம் செய்ய நினைத்து அவனைத் தொட்டு உட்கார வைக்க முயன்றான். ஆனால் யோவான் அவன் கையைத் தட்டிவிட்டு தன் பேச்சை தொடர்ந்தான்.  சரீரத்துக்கு வெளிச்சமாயிருக்க வேண்டிய நம் கண்கள் இச்சை படிந்து இருளேறிவிட்டன; நம் நாவுகள் நீதிகேட்டையே வசனிக்கின்றன.  நம் தகப்பனின் கரங்களில் ஜீவனை ஒப்புக் கொடுக்க வேண்டும் என்று கட்டளை போல் சொன்னான்.

இம்மானுக்கு அச்சமாகவும் குழப்பமாகவும் இருந்தது. என்ன ஆயிற்று யோவானுக்கு? யோவான் போதகராகும் முயற்சியில் இருப்பதை அவன் அறிந்திருந்தான். ஒருவேளை அந்த விருப்பமே பாதிப்பாகிவிட்டதா? முதலில் அந்த விருப்பமே அனாவசியமானது ; முன்யோசனையில்லாதது என்று அவனுக்கு பட்டது.  சட்டென்று ஒரு மிரட்சி. போதகராகும் யோவானின் விருப்பத்தையும் முயற்சியையும் இம்மானிடம் யாருமே குறிப்பிட்டவில்லை. பெங்களூரில் இருக்கும்போது அவன் தன் அம்மாவிடம் பேசுவதேக் கிடையாது. எனில் தனக்கு எப்படி அவை தெரிய வந்தன என திடுக்கிட்டான். அவன் தன் சகோதரனை பார்த்தான். அவர்கள் மத்தியிலேயே அவன் இல்லை. அதன் பிறகு கண் பிரியாமல் அவன் ஒவ்வொரு அசைவையும் கவனித்தான் இம்மான்.

யோவானின் குரல் உயர்ந்து கொண்டே போயிற்று. இரண்டு கைகளும் அகல விரிந்திருந்தன. மேகத்தின்மேல் மனிதக் குமாரன் வருகிறார்; மின்னல்வெட்டுப் போல் பிரம்மாண்டமான வெளிச்சத்தோடு தோன்றவிருக்கிறார். யோவான் நடுங்கியபடி சொன்னான். தன் சொற்களைக் கேட்டு அவனே அஞ்சியதுப் போலிருந்தது.  அந்த அச்சம் இம்மானையும் தொற்றியது. சில நொடிகள் அங்கு பாரமான மௌனம் நீடித்தது.  தொகுப்பாளர் துணிச்சல் பெற்று மெல்ல குரலெடுத்தார். ஆனால் அவரை இடைவெட்டி யோவானே மீண்டும் பேசத் தொடங்கினான். அவன் தாடைப் பகுதி அதிர்ந்துக் கொண்டிருந்தது. நெற்றியில் வியர்வை துளிர்த்தது. தாங்கவொண்ணா குரூரத்தை அல்லது மேன்மையை கண்டது மாதிரி அவன் பதபதைத்தான். பிறகு சொன்னான், நாம் கிறிஸ்துவின் முன்னால் மண்டியிட வேண்டும். குருதி வடியும் அவர் பாதங்களில் முகம் புதைக்க தயாராக இருக்கவேண்டும். பரிசேயர் ஊரைச் சேர்ந்த பாவியாகிய ஸ்தீரியைப் போல் நாமும் நம் கண்ணீரால் அவர் பாதங்களை கழுவ வேண்டும். ஆறா காயத்தில் முத்தமிட்டு மன்னிப்புக் கேட்க வேண்டும். வழி மாறிய ஆட்டுக்குடியை அள்ளியெடுப்பதுப் போல் அவர் நம்மை ஏற்றுக் கொள்வார். ஏனெனில் அவர் நல்லவர்.

குரல் இடறி வார்த்தைகள் உடைந்தன. கண்ணீரை துடைக்கக்கூடச் செய்யாமல் அவன் மைக்கை கழற்றி மேஜையில் வைத்துவிட்டு வேகமாக வெளியேற, இம்மான் அவனை பின்தொடர்ந்தான்.

***


சாட்சி [சிறுகதை] - 3


அரை மணி நேரம் கடந்திருந்தது. ஒரு சின்ன இடைவெளிவிட்டு மீண்டும் பேட்டியை தொடரலாம் என்று முடிவு செய்திருந்தார்கள். பேட்டி எடுத்தவர்களுக்கு சுவாரஸ்யமாக ஒரு விஷயமும் கிடைக்கவில்லை. வெற்றிகரமான பிரபலத்தை பேட்டி எடுப்பது போலுமில்லை. தோற்றுபோனவர்களை பேட்டி எடுப்பது போலுமில்லை. ஊடகத்துறைக்கே சம்பந்தமற்ற  பேட்டி போலிருந்தது. யோவான், இம்மான் இருவருமே எதையும் கவர்ச்சிகரமாக முன்வைக்கவில்லை. சலிப்பூட்டும் அளவுக்கு சாதாரணமாக நடந்து கொண்டார்கள். தன் ஏமாற்றத்தை முகத்தில் காண்பிக்காமல் தொகுப்பாளர் சிரித்தபடி காலர் மைக்கை கழற்றினார். "வெளியே டீ வந்திருக்கிறது. குடித்துவிட்டு தொடர்வோம். சின்ன ரேபிட் ஃபயர் கேள்வி பதிலோடு பேட்டியை முடித்து கொள்ளலாம்".

யோவான் படப்பிடிப்பு அரங்கிலேயே அமர்ந்திருக்க, தேநீர் கோப்பையை பற்றியபடி இம்மான் அலுவலகத்தைச் சுற்றி வந்தான். தமிழ் சினிமாவின் நூற்றாண்டு நாயகர்களோடு கூடம் காலியாக இருந்தது. திரும்பி நடந்து, படப்பிடிப்பு அரங்குக்கு அடுத்திருந்த கலந்தாய்வு அறையை எட்டி பார்த்தான். செல்பேசியில் கண்களை பதித்தபடி சில இளைஞர்கள் உள்ளே படுத்துக் கிடந்தார்கள். சோபாவில் இருந்த பெண் அவனை பார்த்து புன்னகைத்தாள். இம்மான் பதிலுக்கு புன்னகைத்தபடி அவ்விடத்தை நீங்கி பின்புற காலி மனைக்கு வந்தான். ஏசி குளிரை விட்டு வெளியே வந்ததில் வெயில் கண்களில் கூசியது. தொகுப்பாளரும் காமிரா மேனும் வாதாம் மர நிழலில் நின்று புகைபிடித்துக் கொண்டிருந்தார்கள். அவனை கண்டு சிரித்தவாறு "புகைபிடிக்க விருப்பமா?" என்று கேட்டனர்.

அவன் ஒரு சிகரெட்டை எடுத்து பற்றவைத்துக் கொண்டான். காமிரா மேன் பேச்சு கொடுத்தார். “உங்கள் சகோதரர் எப்போதுமே இப்படித்தானா? அவரை பேச வைக்கவே முடியாது போலயே

இம்மா சிரித்தான்.அவன் பேட்டிக்கு ஒப்புக் கொண்டதையே என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அவனிடம் ஸ்மார்ட் போன் கூட கிடையாது. தெரியுமா? யுடியூப் சேனல் என்றால் என்ன என்பதையே அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை.”

இயக்குனர் சிகரெட் சாம்பலை காற்றில் தட்டினார். ஆர்வமாக “உங்கள் இருவருக்கும் தொலைக்காட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லாதது போல் இருக்கிறதே?” என்றுக் கேட்டார்.

“ஆமாம்” என்றான் இம்மான். பால்ய காலத்தில் போன ஒரு நீண்ட விடுமுறை சுற்றுலா போல்தான் தொலைக்காட்சி வாழ்க்கை நினைவில் இருப்பதாகவும் மற்றபடி தாங்கள் எப்போதும் சாதாரண நடுத்தர குடும்பத்து வாழ்க்கையையே மேற்கொண்டதாகவும் கூறிவிட்டு சிகரெட்டை தாழ்த்தி பிடித்து தேநீரை பருகினான்.

"ஆனால் நிரஞ்சனாவுக்கு அப்படியில்லை போல. சின்ன திரை நடிகை மாதிரி கூட இல்லை. பெரிய திரை நட்சத்திரம் போலவே அவர் நடந்து கொள்கிறார்". தொகுப்பாளர் கிண்டலாக சிரித்தார். "முன்பு ஒருமுறை அவரை வேறு சேனலில் பேட்டி எடுத்திருக்கிறோம். முழு ஒப்பனையோடு வந்திருந்தார். இன்னும் பல ஆண்டுகளுக்கு அவருடைய அசலான நிறத்தையோ வயதையோ கண்டேபிடிக்க முடியாது. நிரஞ்சனா உங்களுக்கு தெரியும் தானே? உங்கள் தொடரில் நாயகியாக நடித்த சிறுமி.”

"தொடர் ஒளிபரப்பான சமயத்தில் பழக்கம். அதற்கு பிறகு எந்த தொடர்பும் இல்லை". இம்மான் ஜாக்கிரயுணர்வோடு பதிலளித்தான். “நாடக இயக்குனர் ரொம்ப அன்பாக நடந்துகொள்பவர். துரதிருஷ்டவசமாக அவரோடும் எந்த தொடர்பும் இல்லை

ஆனால் நிரஞ்சனாவுக்கும் அவருக்கும் நல்ல தொடர்பு இருக்கும் போலயே”. இயக்குனர் தொகுப்பாளரை பார்த்து கண் சிமிட்டினார்.

இம்மான் ஆபத்தில்லாதவன் என்று அவர்களுக்கு தோன்றியிருக்க வேண்டும். தடையின்றி பேசினார்கள். நிரந்தரமான சிரிப்பு ஒட்டிய தன் முகமூடியை தொகுப்பாளர் கலைத்துவிட்டிருந்தார். ஆபத்தில்லாதவன் என்று எண்ணியே நிரஞ்சனாவும் தன்னிடம் பழகியிருக்க வேண்டும் என இம்மான் நினைத்தான். கீழிமைகளில் பச்சை வண்ணம் பூசிய அவள் முகம் மனதில் ஓடியது. கூடவே அவள் உடலும் திறந்தது. ரோமமற்ற அவள் முழங்கையில் வயதுக்கு பொருந்தாத சுருக்கங்கள் இருப்பதை அன்றிரவு அவன் கவனித்தான். அவள் முகத்தில் சின்ன களங்கம்கூட இல்லை. முகம் மாறா இளமையில் இருக்க, உடலுக்கு மட்டும் தனியே வயதாகிக் கொண்டிருந்தது. இம்மான் சிகரெட்டை கீழே போட்டு மிதித்து அணைத்தான்.

"ரோலிங்". தொகுப்பாளர் கை தட்டி "நிகழ்ச்சிக்கு மீண்டும் வரவேற்கிறோம்" என்றார். "மிக சுவாரஸ்யமாக போய்க் கொண்டிருக்கும் நிகழ்ச்சியின் கடைசி பகுதியை எட்டிவிட்டோம். இப்போது ரேபிட் பயர். முதல் கேள்வி. நாடகத்தில் மாயபென்சிலில் நீங்கள் முதல் தடவை வரைந்த பொருள் எது?"

தொலைக்காட்சி தொடரின் முதல் காட்சியில் மாய பென்சிலை யதேச்சையாக விளையாட்டு மைதானத்தில் கண்டெடுத்ததும் யோவான் அதை வீட்டுக்கு கொண்டு வந்து சார்ட் காகிதத்தில்  ஒரு பெரிய சாக்லேட் வரைவான். பளபளப்பான ரேப்பரோடு சாக்லேட் அதன் மேல் உண்மையாகவே தோன்ற சந்தோஷமும் அதிர்ச்சியும் உண்டாகும். நாக்கில் இனிய கசப்பு ஒட்டி ருசி நரம்பில் தங்க பாதி சாக்லேட்டை மட்டும் சாப்பிட்டு மீதியை குளிர்பதன பெட்டியில் பத்திரமாக வைத்துவிட்டு கொஞ்ச நேரம் கழித்து திரும்பி வருவான். சாக்லேட் காணாமல் போயிருக்கும். ருசியும் நிஜம். மறைந்ததும் நிஜம். அப்படி தொடங்கிற்று மாய பென்சிலின் கதை.

***



சாட்சி [சிறுகதை] - 2


மோசமான நகைச்சுவை துணுக்குகளை மிகுந்த தன்னம்பிக்கையோடு கூறியபடி தொகுப்பாளர் பேசிக் கொண்டிருந்தார்.  சகோதரர்கள் இருவரின் தற்போதையை வேலை பற்றி விசாரித்தார். யோவான், மருந்து தயாரிப்பு நிறுவனமொன்றில் நிர்வாகியாக இருந்தான். பொறியியல் பட்டதாரியான இம்மானுவேலுக்கு பெங்களூரில் பன்னாட்டு நிறுவனமொன்றில் வேலை. அவர்களுடைய அப்பா ஓய்வு பெற்ற அரசு ஊழியர். சகோதரர்கள் இருவருக்குமே இன்னும் திருமணம் ஆகியிருக்கவில்லை. இல்லை. அவர்கள் தொடர்ந்து நடிக்க விரும்பவில்லை. வேறு வாய்ப்புகள் வந்தன. திரைப்பட வாய்ப்புக்கூடத்தான். ஆனால் அவர்கள் எதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. தனிப்பட்ட காரணம். தொலைக்காட்சியில் நடித்ததே ஒரு விபத்து. மேலும் திரை வாழ்க்கைமீதும் பெரிய மோகம் இல்லை எனலாம். இரண்டு வருடங்களிலேயே தொடர் நின்றுபோனதில் அவர்களுக்கும் வருத்தம்தான். ஆனால் ஊடகத் தொழில் பற்றி எல்லோருக்கும் தெரியுமே.  இன்னொரு விஷயமும் இருக்கிறது. நாடகத்தில் நடித்தவர்களுக்கும் அதை பார்த்து ரசித்தவர்களுக்கும் வயதேறியபோதே அதன் ஈர்ப்பு குறைய ஆரம்பித்துவிட்டது. சண்டையா? இயக்குநருக்கும் தயாரிப்பு நிறுவனத்துக்கும் இடையிலா? தயாரிப்பு நிறுவனத்துக்கும் தொலைக்காட்சி சேனலுக்கும் இடையிலா? தெரியவில்லை. பெரியவர்களின் உலகத்தில் அவர்கள் அப்போது இல்லை.

பேட்டி சுவாரஸ்யமின்றி தொடர்ந்தபோதும், தொகுப்பாளர் உற்சாகம் குறையாமல் கேள்வி கேட்டார். "சொல்லுங்கள். உங்கள் இருவரில் யார் நல்ல நடிகர். நாங்கள் அதிகம் தொலைகாட்சியில் பார்த்தது யாரை?". இம்மான் உடனே யோவானை நோக்கி விரலை நீட்டி "இவன் தான்" என்று கூறி பின்னால் நகர்ந்தான். " அப்படியா நம்பவே முடியவில்லை".

அதுவரை அவசியமற்ற இடங்களில் எல்லாம் மிகையாக ஆச்சர்யத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்த தொகுப்பாளரின் குரலில் இப்போது உண்மையாகவே ஆச்சர்யம் வெளிப்பட்டது. அது புரிந்துகொள்ளக் கூடியதே. இரண்டு பேரில் இம்மானுவேல்தான்  பொது இடங்களில் அதிகம் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறான். கல்லூரியில். அலுவலகத்தில். பெங்களூருக்கு இடம் மாறிய பிறகுதான் இறந்தகாலத்தில் நிழல் அவனைவிட்டு விலகியது. ஆனால்  யோவானோ எப்போதுமே யார் கவனத்திலும் படுவதில்லை. அரிதாகவே யார் ஞாபகத்திலாவது அவன் நெருடினான். மாய பென்சிலின் உதவியால் எல்லாவற்றுக்கும் உயிர்கொடுக்கும் குழந்தை நடிகனை யோவானின் இன்றைய தோற்றத்தில் பொருத்துவது சிரமம். பால்யத்தில் சதா பரவசத்தோடு திரியும் சிறுவனாக யோவான் இருந்தான். துடிதுடிப்பு மிக்க அச்சிறுவனுக்குத்தான் நாடக வாய்ப்பு கிடைத்தது. பள்ளி விழாவொன்றில் அவனை எதேச்சையாக பார்த்த நாடக இயக்குநர் அவனுடைய களங்கின்மையால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். விலாசம் கண்டுபிடித்து நேராக வீட்டுக்கே வந்தார். பெயர் மாற்றத்துக்கு மட்டும் யோவானின் அப்பா அனுமதி அளிக்கவில்லை. அந்த நிபந்தனையை ஏற்றுக் கொண்டு இயக்குனர் அவனை தொலைக்காட்சியில் நடிக்க வைத்தார். அவர் எண்ணியதுப் போலவே அச்சிறுவன் திரையில் அற்புதங்கள் செய்தான். எல்லோருமே அவனை விரும்பினார்கள்.

யோவானுக்கு ஓர் இரட்டைச் சகோதரன் உண்டு என்பதையே நாடக இயக்குநர் முதலில் அறிந்திருக்கவில்லை. வீட்டில் வந்து பார்த்ததும் ஆச்சர்யம் அடைந்தார். முக்கியமான தகவலை தவறவிட்டதற்காக தன் உதவியாளர்களை கடிந்துகொண்டவர் "இதுவும் நல்லதுதான். ஒருத்தனுக்கு ஜீரம் வந்தால் இன்னொருத்தனை வைத்து சமாளித்துவிடலாம்" என்று பலமாக சிரித்தார். ஆனால் திரைத் தேர்வின்போதே அதன் சாத்தியமின்மை அவருக்கு தெரிய வந்துவிட்டது. இம்மானுவேலால் காமிராவையோ  அல்லது காமிராவுக்கு பின்னால் இருப்பவர்களையோ பார்க்காமல் வசனம் பேச முடியவில்லை. வெறுமனே நிற்கும்போதுகூட அவன் கண்கள் அலைபாய்ந்தன. அழுகை தேங்கி முகம் கோணியது. இயக்குநர் அவனை நடிக்க வைக்க இயன்ற மட்டும் போராடி தோற்றார். ஆனால் யோவானோ இயற்கையாகவே நல்ல நடிகன். காமிரா பயம் கிடையாது. ஒத்திகைக்கூட இல்லாமல் வசனங்களை சரியான உணர்ச்சிகளோடு பேசும் திறன் அவனுக்கிருந்தது. தன் பகுதி மட்டுமில்லாமல் காட்சியில் நடிக்கிற மற்றவர்களின் வசனங்களைக்கூட மனப்பாடமாக அறிந்து வைத்திருப்பான். பிற நடிகர்கள் மறந்துவிடும்போது கிசுகிசுப்பாக எடுத்துக் கொடுப்பான். அவர்கள் சிரித்துவிடுவார்கள். சில நேரம் மற்றவர்கள் வசனம் பேசும்போது யோவானின் உதடுகளும் கூடவே அசையும். "கட்" என்று இயக்குநர் மைக்கில் அதட்டுவார். "நீ சொல்லாத". நாக்கை மடித்து "த்ச்" என்பான் சிறுவன் யோவான்.

இன்று திரும்பி வந்தால் அச்சிறுவனால் அசௌகர்யமான மௌனத்தைத் தவிர வேறெதையும் யோவானிடம் பகிர்ந்துகொள்ள முடியாது என இம்மானுவேல் எண்ணினான். போதகராக விரும்பும் யோவானும் அச்சிறுவனை பார்த்து திகிலடையக் கூடும்.   

***