Wednesday 18 November 2020

முதல் மனிதன்


[1] கவிதை

கவிதை பற்றிய வரையறைகள் நூற்றாண்டுகளாக விவாதப் பொருளாகவே இருந்து வருகின்றன. கவிதையின் பயன்பாடு சார்ந்து மட்டுமில்லை; கவிதை என்றால் என்ன என்பதுகூட துல்லியமாகப் பதில் சொல்ல முடியாத கேள்வியாகவே இருக்கிறது. அல்லது அதன் எல்லா பதில்களிலும் எப்படியோ ஒரு விடுபடல் வந்துவிடுகிறது. பொதுவாக இலக்கியத்திற்கே அந்தக் குணம் உண்டு எனும்போதும் பிற எந்த இலக்கிய வடிவத்தைக் காட்டிலும் கவிதையே அதிகம் வெகுஜன புழக்கம் கொண்டிருக்கிறது. வார இதழ்கள் செல்வாக்கோடு இருந்த நாட்களில் சுஜாதா கணையாழியில் ஒரு நகைச்சுவை எழுதியிருந்தார்- ஒரு போஸ்ட் கார்ட் வாங்கினால் யாரும் கவிஞராகிவிடலாம் என்று. இதழ்களுக்கு ஓயாமல் கவிதை அனுப்பும் அந்த காலம் இன்றில்லை. எனினும் முகநூல், வாட்சாப் முதலிய இணைய ஊடகங்களில் இன்னமும் கவிதைகள் எழுதிக் குவிக்கப்படுகின்றன. ஏன் கவிதை பரவலாக எழுதப்படுகிறது என்பதும் எது கவிதை என்பதும் தனித்தனியே பேசப்பட வேண்டிய விஷயங்கள் அல்ல என நினைக்கிறேன்.

'சிறுகதை', 'நாவல்', 'கட்டுரை' போன்ற சொற்களை நாம் தினசரி வாழ்வில் கேட்பது அரிது. ஆனால் 'கவிதை' எனும் சொல் அப்படியல்ல. பல நேரங்களில் அது சாதாரணமாக உபயோகிக்கப்படுகிறது. கவிதையோடு பல விஷயங்கள் ஒப்புமை செய்யப்படுவதை நாம் தொடர்ந்து கேட்கிறோம். அழகிய பெண். அழகான நிலக் காட்சி. இனிய ஞாபகம். வித்தியாசமான வாக்கியம். உணர்ச்சிகரமான பேச்சுஇப்படி அழகானவையும், வித்தியாசமானவையும், உணர்ச்சிமிக்கவையும் நமக்கு ஏனோ கவிதையை நினைவுப்படுத்துகின்றன. அதாவது தினசரித்தன்மை விலகும் இடத்தில் தோன்றும் ஒவ்வொன்றையும் நாம் கவிதை என்று துணிந்து அடையாளப்படுத்துகிறோம். அப்படி எல்லாவற்றையும் ஒரேடியாக கவிதை என்று சொல்ல முடியாதுதான். அதே நேரம், அவற்றைக் குறிப்பிட, வேறெந்தச் சொல்லும் உடனடியாகத் தட்டுப்படுவதில்லை என்பதையும் ஒப்புக்கொள்ளவே வேண்டும். எல்லா மேலான அனுபவங்களையும் உணர்ச்சிகரமான மனநிலைகளையும் கவிதை என்று சொல்வது பொருத்தமற்றதன்று. சமூகமாக நம் ஆழ்மனதில் கவிதையின் இயல்பு அந்த அளவு பதிந்திருக்கிறது. கவிதை உதிப்பதற்கான தருணங்கள் வாழ்க்கைக்குள் எப்போதும் காத்திருப்பதனாலேயே அது பிரபலமான வடிவமாகவும் இருக்கிறது. முழுமையாக உள்வாங்க முடிந்திராவிட்டாலும், சிறிய உரசலாகவேனும் அத்தருணங்களை அனைவரும் எதிர்கொண்டிருப்போம். நம்மைச் சுற்றி,கவித, கவித என்று உச்சுக்கொட்டும் குரல்கள்தான் எத்தனை?

Tuesday 6 October 2020

மாயமாகும் நிலையின்மை

இலக்கியம் என்பது ஒருவகையில் நினைவுகளை மீட்டெடுக்கும் செயல். ஆனால் மெர்லின் ராபின்சன் சொல்வதுப் போல் நினைவுகள் தன்னிச்சையானவை. துண்டுப்பட்டவை. எனவே துல்லியமாக நினைவை மீட்டெடுப்பது யாருக்கும் சாத்தியம் கிடையாது.  எப்படி புறயதார்த்தத்தை மனிதர்கள் அறிந்துவிடவே முடியாதோ அதுப் போல. எனவே நினைவுகளை மீட்டெடுக்கும் முகாந்திரத்தில் இலக்கியம் நினைவுகளை கட்டியெழுப்புகிறது எனலாம். நினைவுகள் வழியே உணர்ச்சிகளை; விழுமியங்களை; கனவுகளை.  மார்சல் ப்ரூஸ்டின் நாவலான “தொலைந்த காலத்தைத் தேடி” (In search of lost time) உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. நவீன காவியம் என்று அழைக்கப்படும் அந்த நூல் நினைவையும் காலத்தையும் பற்றிய மகத்தான ஆக்கங்களில் ஒன்று. ஏழு பகுதிகளை உடைய அத்தொடரில் முதல் பகுதியை மட்டுமே நான் வாசித்திருக்கிறேன் (எழுத்தாளர் லிடியா டேவிஸ் மொழிபெயர்ப்பு). கவித்துவத்திற்காகவும், சிக்கலான உணர்ச்சி நிலைகளின் வெளிப்பாட்டிற்காகவும் அறியப்பட்டும் அந்த நூல் மொழியின் கடினத்தன்மைக்காகவும் பெயர் பெற்றது. காற்புள்ளிகள், அரைப்புள்ளிகள் ஆகியவற்றின் இணைப்பில் வளர்ந்துக் கொண்டே போகும் நீண்ட வாக்கியங்கள், அடைப்புக்குறிக்குள் நீளும் பத்திகள் என பின் தொடர்வதற்கு கஷ்டமான உரைநடையுடையவர் ப்ரூஸ்ட். ஆனால் நினைவுகள் வழியே உலகை கட்டியெழுப்புவது என்பது நினைவுகளின் தொடர்பின்மைகள், காலக் குழப்பங்கள், உருமாற்றங்கள், நிறப் படிதல்கள் என எல்லாவற்றையும் உள்ளடக்கியதே. எனவே அந்த நடையும் பௌதீக நியதிகளை மீறிய மாயத்தன்மையோடு இருக்கிறது.

Friday 25 September 2020

கிறுக்கர்களுக்கு ஒரு முத்தம்

சிற்றிதழ் வட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவா லாட்ஜை பரிச்சயம் செய்துக் கொள்ளும் வாய்ப்பு, மறைந்த “தக்கை” பாபுவினால் அப்போது எனக்கு கிட்டியது. சேலத்தில் நடக்கும் இலக்கியக் கூடுகைகளின்போது லாட்ஜ் கட்டிடமே தள்ளாட்டத்தில் கொஞ்சம் கோணலாகிவிடும் என்பது பொதுவான அறிதல். அப்படியொரு இரவில்தான் ஜான் சுந்தர் எனக்கு அறிமுகமானார். தளும்பும் அறைகளுக்கு வெளியே மாடி வராந்தாவில் நாங்கள் தெளிவாக நின்றுக் கொண்டிருந்தோம். 

Wednesday 9 September 2020

மலர்கள் நினைவூட்டுவது

"ஆழ்நதியைத் தேடிபுத்தகத்தை நான் முதல் தடவை வாசித்தது 2014ல். அந்த நேரத்தில் கட்டுரைகளை முழுமையாக உள்வாங்கவில்லை என்பது இப்போது மறுவாசிப்பில் புலப்படுகிறது. இலக்கிய இயக்கங்கள், அழகியல்கள், நோக்கங்கள் பற்றி மிகத் தோராயமான ஒரு சித்திரமே அன்று என்னிடம் இருந்தது. வாசிப்பினூடே வெவ்வேறு பிராந்தியங்களில் சுற்றியலைந்து ஆறு வருஷங்கள் கழித்து தற்போது மீண்டும் இந்த நூலை படிக்கும்போது ஒவ்வொரு கருத்தையும் அதற்குரிய பின்புலத்தில் வைத்து புரிந்துகொள்ள இயல்கிறது. அதனாலேயே நூலின் முக்கியத்துவமும் ஸ்தூலமாக பிடிபடுகிறது. ஜெயமோகனின் இலக்கியத் திறனாய்வு நூல்களில், ”ஆழ்நதியைத் தேடி”  தனித்துவமான இடம் கொண்டது எனக் கருதுகிறேன். “நாவல்போல் கோட்பாட்டு நூலோ அல்லதுநவீன தமிழ் இலக்கியம்போல் அறிமுக நூலோ அல்ல இது. “இலக்கிய முன்னோடிகள்போல் படைப்பாளிகளை மதிப்பிடும் நூலும் அல்லமாறாக, தத்துவ நோக்கில் இலக்கியத்தை வரையறை செய்யும் நூல். ஜெயமோகனே குறிப்பிடுவதுப் போல் இலக்கியத்தின்ஆன்மீக சாரம்பற்றிய விசாரனை.



இதுவரை பல நூறு பக்கங்களில் இலக்கிய திறனாய்வுகள் எழுதியிருப்பதோடு தொடர்ச்சியான உரையாடல்கள் வழியாக அவற்றை சூழலிலும் முன்நிறுத்தியுள்ளார் ஜெயமோகன். எனவே, “ஆழ்நதியைத் தேடிஎந்த வகையில் விசேஷமானது என்று ஒருவருக்கு நிச்சயம் கேள்வி எழும். பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் முதல் பதிப்பு கண்ட நூல். இடைப்பட்ட காலத்தில் அதில் உள்ள கருத்துக்களை பல்வேறு இடங்களில் அவர் எழுதியிருக்கிறார்இன்னும் துல்லியமான சொற்களாலும், நேர்த்தியான படிமங்களாலும். ஆனால் முக்கியமான வித்தியாசம். மற்ற இடங்களில் எல்லாம், அம்முடிவுகளை அவர் எப்படி அடைந்தார் என்பதை வாசகர்கள் கண்டுபிடிக்க முடியாது. அல்லது அந்த பாதை வெளிப்படையாக இருக்காது. தம் துல்லியத்தினாலேயே அவை ஆதாரம் தேவைப்படாத உண்மைகளாக நிலைகொண்டிருக்கின்றன. எளிமையினாலேயே மறுக்க முடியாததாகவும். ஒருவகையில் அவை ஆசிரியரின் சொற்கள். தடம் இதழில், வெளியானநத்தையின் பாதைதொடர் ஒரு நல்ல உதாரணம். ஆனால்ஆழ்நதியைத் தேடிநூலில் உறுதி இருக்கும்போது கூடுதலாக நெருக்கமும் வெளிப்படுகிறதுபேசுபொருளே காரணம் என நினைக்கிறேன். பிற நூல்களில் இருப்பது இலக்கியத் தேடல் என்றால் இதிலிருப்பது ஆன்மீகத் தேடல். ஆனால் இரண்டும் தனித்தனி இருப்புகள் அல்ல. ஒன்று கனிந்து இன்னொன்றாக மாறுகிறது.

 புத்தகம் முழுக்க, வெவ்வேறு விதங்களில் ஜெயமோகன் உத்தேசிக்கும் ஆன்மீகத்தின் பொருள் விளக்கப்படுகிறது. அதில் நான் முதன்மையாக எண்ணுவது, முன்னுரையில் இருக்கும் வரையறையையே. தன்னுள் அதை உணராதவர்களுக்கு ஒருபோதும் விளக்கமுடியாத உள எழுச்சி என்று அங்கே சுட்டப்படுகிறது. இந்நூலின் அடிப்படைக் கூறாக இதையே குறிப்பிடுவேன். சொல்ல முடியாத ஒன்றை சுட்டிக் காட்டி அதன் முக்கியத்துவத்தை தக்கவைக்க, அதை சூழ்ந்திருக்கும் பிற விஷயங்கள் -வரலாறு  முதல் தனிமனிதனின் மனம் வரைகுறித்து பேசும் நூல் இது. ஆழ்நதியின் ஓட்டத்தை நிலத்தின் மேலிருந்து கண்டுபிடிப்பது. எனவே இலக்கியம் அளிக்கும் ஆன்மீக அனுபவத்தை தன் வாழ்க்கையில் ஒருபோதும் உணர்ந்திராத ஒருவரோடு இது பற்றி பேசுவதில் அதிகம் பயன் இருக்க முடியாது.

 கி.ராவின் கோபல்ல கிராமம் வெளியானபோது அதை நாவலாக ஏற்றுக் கொள்வதில் பலருக்கும் தயக்கம் இருந்திருக்கிறது. அதுக் குறித்து எழுதும்போது கி.ரா சொல்கிறார். “ஒட்டகச்சிவிங்கியை முதன் முதலில் பார்த்தவன் சொன்னானாம் இது மிருகமே இல்லை என்று”. அறியாத ஒன்றை அவசரமாக நிராகரிப்பது தொடர்ந்து நடப்பதே. பாதுகாப்பின்மையால் பதற்றம் கொள்பவர்கள் சௌகர்யத்திற்காக மூர்க்கமான நிராகரிப்பில் தஞ்சம் புகுவார்கள். அவர்களே இலக்கியத்தை பயன்பாட்டுத் தளத்தில் மட்டும் எதிர்கொள்பவர்கள். அல்லது தம் வீட்டின் எல்லைக்கு அப்பால் இலக்கியத்தை விரித்து எடுக்கும் கற்பனை இல்லாதவர்கள். அத்தகையோரிடம், இலக்கியத்தின் ஆன்மீகத் தேடல் பற்றி பேசவே முடியாது. ஒருமுறையாவது வாசிப்பின் வழியே அதை உணர்ந்தவர்களிடம்தான் இதை முன்வைக்க முடியும். முதல் தடவை படிக்கையில் இக்கட்டுரைகளை தர்க்கபூர்வமாக நான் ரொம்ப தூரம் தொடரவில்லை. எனினும் அனுபவத் தளத்தில் அதன் விளைவுகள் பதிந்ததற்கும் அதுவே காரணம் என நினைக்கிறேன்.

 அகத்திலும் புறத்திலுமாக, இலக்கியம் இரண்டு விதமான பணிகளை மேற்கொள்கிறது. புறம் என்று பொருள்வய உலகின் எல்லா அடுக்குகளையும் அவற்றை நகர்த்தும் வெவ்வேறு விசைகளையும் சுட்டலாம். நான்கு பேர் இருப்பதால் சமூகம் என்றும் அதை சொல்லலாம். எல்லா அறிவுத் துறைகளையும் போல் இலக்கியத்திற்கும் சமூக அளவில் பெறுமானமும் அது மட்டுமே ஆற்றக்கூடிய பாத்திரமும் உண்டு. பலர் பலவிதமாக அவற்றை வரையறுக்கக்கூடும்.  “இலட்சியக் கனவுகளுக்கும் அறவுணர்வுகளுக்கும் வரலாற்றில் பீடம் தேடித் தருவதுஎன்று அதை ஜெயமோகன் குறிப்பிடுகிறார். (இரு இணைப்பறவைகள்).

 புறம் என்பது சமூகம் என்றால் அகம் என்பது அந்த நான்கு பேர் இல்லாத இடம். அங்கே விழிப்பு தனித்திருக்கிறது. அறிதல் கூர்மைப்படுகிறது. எனவே ஒவ்வொரு அனுபவமும் தூய நிலைக்கு போய்விடுகிறது. இலக்கியத்தின் இந்த அகவயமானப் பணியை சமூகத் தளத்தில் வைத்து உரையாட முடியாதுஅதையே ஜெயமோகன் ஆன்மீகத் தளம் என்று கூறுவதாக புரிந்துகொள்கிறேன். சற்று தாராளமாகஇறையனுபவம்என்றும் அதை அவர் வகுக்குகிறார். “வாழ்வின் அனைத்து அனுபவங்கள் மூலமும் இறையனுபவத்தை தேடியிருக்கிறான் மனிதன். அல்லது அனைத்து அனுபவ உச்சங்களிலும் இறையனுபவத்தை அடைந்திருக்கிறான்”. (தணியா பெருவேட்கை). மதம் நீக்கப்பட்ட இறையனுபவம் என்று நவீன உரையாடலில் அதை குறிப்பிடலாம்.

 (அகம், புறம் என்பது தோராயமான பிரிவினையே. வெப்பம் மழையாவதுப் போல் ஒன்று இன்னொன்றை மாற்றியமைத்தபடியே உள்ளது. நூற்றாண்டுகளில், விவிலியத்தின் தரிசனங்கள் புறத்தில் சமூக விழுமியங்களாகிவிடுகின்றன. தஸ்தாயெவ்ஸ்கியின் நாவல்களில் அதே தரிசனம் திரும்ப ஆன்மீகத் தளத்தை அடைந்துவிடுகிறது.)

 இந்த நூலின் இரண்டு முக்கிய அம்சங்களை மட்டும் சுட்டிக் காட்ட வேண்டும்.

 முதலாவதாக, இலக்கியத்தின் புற மதிப்பை எந்த விதத்திலும் குறைத்துக் காட்டாமல் அதன் தொடர்ச்சியாகவே அக அனுபவமான ஆன்மீகத் தளத்தை கட்டமைத்திருப்பது. சொல்ல முடியாததன் இருப்பை, பேசாமல் இருப்பதன் வழியே நிறுவ முடியும் என்பது ஒரு தவறான பொது அபிப்ராயம். அது ஒருவகையில் அந்த ரகசிய இருப்பை நிராகரிப்பதே ஆகும். மாறாக, சொல்லக்கூடியதை எல்லாம் சொல்லி முடித்தப் பின்பும் தீராமல் இருப்பதே அதன் நிரூபணம். சொல்லி சொல்லியும் எஞ்சுவதுஎனவே இலக்கியத்தின்இறையனுபவம்பற்றி பேசுவதற்கு முன்னால் கலாச்சாரத்தில், சமூக மாற்றத்தில், அரசியல் வரலாற்றில் இலக்கியத்துக்கு என்ன இடம் இருக்கிறது என்பதையும் பேச வேண்டியிருக்கிறது. தொகுப்பில் இடம்பெற்றுள்ளபண்பாட்டின் மறைபிரதிபோன்ற கட்டுரைகள் அந்த பணியை நிவர்த்தி செய்கின்றன. நம் ஆழ்மனதின் கட்டமைப்பை அவை பரிசீலிக்கின்றன. ஆழ்மனதை பரிசீலிப்பது அன்றாடத்தை பரிசீலிப்பதே.

 இரண்டாவதாக, இறையனுபவத்தை விழுமியங்களுக்கு அன்னியமானதாக சித்தரிக்காதது. நல்ல எடுத்துக்காட்டு - பஷீருடனான சந்திப்பை விவரிக்கும்அழியாத நீதிகட்டுரை. இலக்கிய அனுபவம் மனிதர்களின் அறிவுப் பரப்பில் நிகழ்வதில்லை. அதன் உச்சநிலை உள எழுச்சியாகவே இருக்கிறது. தலைக்கு மேல் வானம் முடிவற்று திறந்திருப்பதை ஒருவர் சட்டென்று உணர்வதுப் போல் அது ஒரு திடுக்கிடல். அல்லது நன்றியறிதல். தன் மர்மத்தினாலேயே அந்த உச்சநிலையில்  மானுட விழுமியங்கள் பொருட்படுத்தப்படாமல் போகலாம். நீதியின் இடம் பற்றிய குழப்பங்கள் மேலிடலாம். ஆனால் பஷீர் சொல்கிறார் நீதியே இலக்கியத்தின் முதன்மை அடிப்படை என்று. அவருடைய கூற்றின் மூலம் நீதி என்பது இலக்கிய அனுபவத்தின் மறுஎல்லையில் இருக்கும் வஸ்துவாக இல்லாமல், இலக்கிய அனுபவத்தில் திரள்வதாக மாறுகிறது. உண்மைப் போல, அழகுப் போல அதுவும் இலக்கிய வெளிப்பாடாகிறது. இக்கட்டுரைகள் வழியே தொடர்ச்சியாக அறத்தையும் நீதியையும் இலக்கியத்தின் அடிப்படை அனுபவத்தோடு இணைத்திருப்பது அவசியமான பங்களிப்பு என நம்புகிறேன். “கவிதையும் நீதியும்கட்டுரை இன்னும் துல்லியமாக இதை பேசுகிறது. மரபான நீதி அல்ல; கவித்துவ நீதியே முக்கியமானது என்று சுட்டுகிறது

தற்போது, அமெரிக்க எழுத்தாளர் மெர்லின் ராபின்சனின்வீடுநாவல் வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதில் ஒரு காட்சி. நாவலின் மையப்பாத்திரமான க்ளோரி இளமையில் தன் சகோதரிகளோடு சேர்ந்து தோட்டத்துக்குச் சென்று கை நிறைய மலர்கள் பறித்து வருவாள். அதை பார்த்ததும் அவள் தந்தையின் கண்கள் நீரில் மினுங்கிவிடும். அப்போது வரக்கூடிய வாசகங்கள்

அவர் ஆம், ஆம் என்று சொல்வார். அவர்கள் ஏதோ ஞாபகச் சின்னத்தை கொண்டு வந்ததுப் போல். இந்த மலர்கள் ஒரு இனிய நினைவூட்டல் என்பதுப் போல். மலர்கள் பற்றிய நினைவூட்டல்

இலக்கியமும் அதையே செய்கிறது என எண்ணுகிறேன். மலர்கள், மலர்களையே நினைவூட்டுவதுப் போல். அழகையும் பக்தியையும் சூடக்கூடிய மலர்களுக்கு பின்னால் இருப்பது ஆற்றல். அதுவே ஒளியிலிருந்து மலர்தல் எனும் முதல் செயலை மேற்கொள்கிறது. எல்லா அர்த்தங்களும் அங்கிருந்தே பிறக்கின்றன. நிறமாய் மணமாய் தன்னை அது நிகழ்த்திக் கொள்கிறது. இருப்பின் மகோன்னதமான புதிர் அங்குள்ளது. அதையே உணர்வெழுச்சியாக தந்தை அறிகிறார். அப்படியாக மலர்கள் மலர்களின் சாரத்தை நினைவூட்டுகின்றன. இலக்கியத்தின் ஆன்மீகத் தளமும் அதுவே. மலர்கள் நமக்கு நினைவூட்டுவது.  அதை மறக்காமல் இருக்க வேண்டும் என்பதையே ஜெயமோகன் இந்த நூலில் குறிப்பிடுகிறார்.