Saturday 25 September 2021

அந்த மூன்றாவது கை

இந்த சம்பவத்தை ஏற்கனவே கேள்விப்பட்டிருக்கிறேன். ஆன்மத் தேடலில் நம்பிக்கை இருக்கிறதா என்று ஒரு நிகழ்ச்சியில் அசோகமித்திரனிடம் கேட்கப்படுகிறது. அதற்கு அவர் அறுபது வருடமாக ஒரு நல்ல டூத்பேஸ்ட்டை தேடிக் கொண்டிருக்கிறேன்; அதுவே கிடைக்கவில்லை என்று பதிலளிக்கிறார். இப்போது எழுதும்போதும் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. கூடவே, எவ்வளவு பொருத்தமாக பதில் என்றும் தோன்றுகிறது. சொல்லற்கரிய ஆப்த வாக்கியம் அல்ல அப்பதில். இன்னோர் எழுத்தாளர்கூட அதை சொல்லலாம்தான். ஆனால் இன்னொருவர் சொல்லும்போது மேடை சுவாரஸ்யத்திற்காக மட்டுமே அது உரைக்கப்படுகிறது என்பது உடனடியாக தெரிந்துவிடும். ஆனால் அசோகமித்திரனின் ஆளுமையோடு சேர்கையில் அதுவே இயல்பான பதிலாக -விதூஷனத்தனமற்றதாக- மாறிவிடுகிறது. அவரிடம் நிச்சயம் வேறு பதிலை எதிர்பார்க்க முடியாது என்றும் கருத நேர்கிறது.