Thursday 6 September 2018

கடல் (சிறுகதை)

கடற்கரைக்கு இன்று கூட்டி போவதாக ஜானின் அப்பா கூறியிருந்தார். கல்லூரி விடுதியில் இருக்கும் பெரியம்மா மகன்  யாக்கோப் அண்ணாவையும் உடன் அழைத்துச் செல்லலாம் என்பது திட்டம். போனதடவை கடற்கரைக்குச் சென்றிருந்தபோதும் யாக்கோப் அண்னா கூட வந்திருந்தார். ஜானுடைய அப்பாவும் அம்மாவும் கரையில் சற்று மேடான பகுதியிலேயே அமர்ந்து கொள்ள ஜானும் யாக்கோப் அண்ணாவும்தான் அலைகளில் கால் நனைக்கக் கீழே இறங்கினார்கள்.யாக்கோப் அண்ணா அவன் கைகளை விடவே இல்லை. சிலபோது பிடி இறுக்கமாக இருந்தபோதும்கூட அவரது அண்மையின் விருப்பத்தால் அச்சிறுவலியை பொறுத்துக் கொண்டான்.

நீரலைகள் கரையேறி பின் வளைந்து இரைச்சலுடன் உள்வாங்கின. பாதங்களில் ஈர மணல் அழுந்தி ஒட்ட முழங்கால்களுக்குக் கீழே சில்லிட்டு விலகும் நுரைத் தீண்டல். இன்னும் சில அடிகள் முன்னோக்கி நடக்க முயற்சிக்க யாக்கோப் அண்ணா அவன் கைகளை அழுத்தி தடுத்தார். “கொஞ்ச தூரம் முன்னால போலாம்ணா”


“அலை வந்து தூக்கிட்டு போயிடும்”.


சுற்றிலும் பார்த்தான். பொங்கியும் தாவியும் வந்து கொண்டிருந்த அலைகளில் எல்லோரும் சிரித்துக் குதித்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். “எல்லோரும் போறாங்களே”

PC : A V Manikandan

யாக்கோப் அண்ணாவின் கன்னங்கள் புன்னகையில் அகலமாகின. “பெரியவங்க போலாம்” என்று சொல்லி அவனை அள்ளித் தூக்கி அந்தரத்தில் நிறுத்தினார். நீர் கொப்பளிப்புகளோடு அலைகள் எழுந்து வந்து கொண்டிருக்க, அவற்றுக்குப் பின்னால் மெல்லிய அசைவுகளோடு பிரம்மாண்டமான நீல பரப்பு, கண் எல்லைவரை மினுங்கலாக விரிந்திருந்தது. யாக்கோப் அண்ணா மிரட்டல் தொனிக்கும் பொய்க்குரலில் “முன்னாடி போனா அலை பெருசா வந்து தூக்கிட்டு போயிடும்” என்றார். உப்பி எழும் அலைகளை உயரத்தில் இருந்து பார்க்க அவனுக்கும் கொஞ்சம் அச்சமாகவே இருந்தது. அவ்வச்சத்தினோடே “பெரியவங்க போனா மட்டும் தூக்கிட்டு போகாதா?” என்றான்.

“பெரியவங்களும் கொஞ்சம் வரைக்கும்தான் முன்னாடி போகலாம். அதுக்கு மேலப் போனா அலை தூக்கிட்டு போயிடும்”. சடுதியில் அவன் முகத்தில் உருவான கலக்கத்தைக் கண்டு சமாதானமாக “ஆனா தூரமா இருந்தா அலை வராது” என்று சொன்னார்.


“ஜான்.. யாக்கோப்..”. அம்மாவின் குரல் அலைகளின் சப்தத்திற்கு நடுவே தேய்ந்து ஒலித்தது. யாக்கோப் அண்ணா அவனை இறக்கிவிட்டார். “அம்மா கூப்பிடுறாங்க பார்”. கடற்கரை காற்றினால் நெற்றியில் ஒட்டியும் பிரிந்தும் அலைவுற்றுக் கொண்டிருந்த தலைமுடியையும் படபடத்த புடவையையும் சரி செய்தபடி நின்றிருந்த அம்மா அப்போது மிக அழகாக இருந்தார். அவன் ஓடிப் போய் அவரது கைகளைப் பிடித்துக் கொண்டான். “நான் உங்கள என் கண்ணு முன்னாடியேதான இருக்கச் சொன்னேன்..? அலை வந்து அடிச்சிட்டு போயிடும்”. அவனது கசங்கிய சட்டையை நீவிவிட்டபடி அம்மா சொன்னபோது “நாங்க தூரமா தள்ளிதான்மா இருந்தோம். தூரமா இருந்தா அலை வராது” என உற்சாகமாகப் பதில் அளித்தான்.


Wednesday 4 July 2018

பலூன் கோடாரி


"நான் பேசுவதற்கு விரும்புபவன். என் கவிதைகள் என்னைப் பேசாத இடத்திற்கு இழுத்துப்போகிறதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்" 

 
-ஷங்கர்ராமசுப்ரமணியன் 

நோக்கம் (purpose) அவசியமில்லாத ஒரே இலக்கிய வடிவம் என்று கவிதையைக் குறிப்பிடுவார்கள். கவிதைக்கென்று தீர்மாணமான ஒரு கருத்தோ, தரப்போ, திட்டமோ இருக்கவேண்டிய கட்டாயம் இல்லை. அடிப்படையில் மொழி எனும் அமைப்பு மட்டுமே அதற்குப் போதுமானது. மொழியின் நிச்சயமின்மைகளுக்குள் குழந்தைப் போல் கவிதை சுதந்திரத்துடன் ஓடி அலைகிறது. பொம்மை பாகங்களை இணைத்து ரயில்வே தண்டவாளத்தை எழுப்புவது போல் அது மொழியுடன் விளையாடுகிறது. பல சமயம் அதிலேயே நிஜ ரயில்களைக்கூடத் தோன்ற வைக்கிறது. புனைக்கதைகள் போலில்லாமல் முதன்மையாக மொழிக்குள்ளேயே நிகழ்வதனாலேயே கவிதை, ஒரு வகையில் வடிவவாதிகளின் (Formalists) இலக்கிய வரையறைக்குள் கச்சிதமாகப் பொருந்துகிறது என்று கூறலாம். வடிவவாதிகளின் கூற்றுப்படியே, பரிச்சயமான ஒன்றை -பொருளோ, காட்சியோ, அனுபவமோ- மொழிக் கட்டமைப்பின் மூலமாக முற்றிலும் புதிதாக உருமாற்றி அளிக்கிறது கவிதை. வீடு திரும்பும் வழக்கமான பாதையிலிருந்து விலகி, வேண்டுமென்றே தெரு மாறி செல்லும்போது ஏற்படும் விடுதலை உணர்ச்சி போல். அல்லது திகைப்பு போல். 

நோக்கம் இல்லாவிட்டாலும் கவிதைக்கு விளைவு உண்டு. அதையே கவித்துவ மனநிலை என்றும் உணர்ச்சிநிலை என்றும் சொல்கிறோம். “கவிதை என்பது கவித்துவ மனநிலையை உற்பத்தி செய்யும் இயந்திரம்” என்கிறார் பால் வெலரி. மொழியில் கவிதை தன்னை வெளிப்படுத்துவதன் மூலமாக அல்லது நிகழ்த்திக் கொள்வதன் மூலமாக ஒரு குறிப்பிட்ட மன அல்லது உணர்ச்சி நிலையை உருவாக்குகிறது. எனவே ஒரு குறிப்பிட்ட கவிஞர் பற்றிப் பேசுவது என்பது ஒருவகையில் அந்தக் குறிப்பிட்ட கவித்துவ நிலையைப் பற்றிப் பேசுவதே. எல்லா மனநிலைகளோடும் உணர்ச்சி நிலைகளோடும் எப்படியோ பொழுதுகளும் இயல்பாக இணைந்துவிடுகின்றன. தேவதச்சனின் கவிதைகளைச் சமவெளியின் கவிதைகள் என்று குறிப்பிடும் சபரிநாதன் அவை மதியத்தின் சிறுபொழுதோடு இணைந்தவை என்கிறார். என் வாசிப்பில் சபரியின் கவிதைகள் அதிகாலையின் பொன் கீறலுடனே எப்போதும் இணைந்திருக்கின்றன. [“அறுபடாது ஆயிரம் இரவுகள் நகர்ந்து தீர்ந்த பின் வந்துறைந்தது போல்... அப்படி ஒரு விடியல்”-சபரிநாதன் ]. அவ்வகையில் ஷங்கர்ராமசுர்பரமணியனின் “ஆயிரம் சந்தோஷ இலைகள்” தொகுப்பிலுள்ள கவிதைகளை ஏ.வி.மணிகண்டன் கோடிடுவது போலவே நானும் முன்மாலைப் பொழுதான அந்தியுடனே தைத்துக் கொள்கிறேன். [“ஷங்கரின் கவிதையில் இருக்கும் மெல்லுணர்வு சங்கப்பாடல்களில் வரும் நள்ளென்ற யாமத்தின் முன்மாலை பொழுது என்று விளங்குகிறது” -ஏ வி மணிகண்டன்]. பிரதானமாகச் சொல்லாட்சிகளினால் இல்லாமல் காட்சி சித்தரிப்புகள் வழியாகவே தன் எழுத்துக்களில் கவித்துவ உணர்ச்சிநிலையை வெளிப்படுத்துகிறார் ஷங்கர். அதனாலேயே குறுஞ்சித்தரிப்பு (micronarration) எனப்படுகிற கதை வடிவத்திற்கான சிறந்த உதாரணங்களாகவும் அவரது கவிதைகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. 




ஷங்கர்ராமசுப்ரமணியன் தொன்னூறுகளின் பிற்பகுதியில் எழுதத் தொடங்கிய கவிஞர். தொன்னூறுகள் என்பது இந்தியாவுக்கு மிக முக்கியமான ஒரு காலகட்டம். இந்தியா தவிர்க்கமுடியாத பொருளாதார சக்தியாக மேலெழுவதற்கான அடித்தளங்கள் போடப்பட்ட சமயம் அது. இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை நேருவிய சோஷியலிசத்திலிருந்து தாராளமயமாக்கல் நோக்கி அப்போதே வலுவாக நகர்கிறது. அது குறித்து நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் இன்றுவரை நம் சூழலில் விமர்சனங்கள் பேசப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. தொன்னூறுகளின் இந்தியாவுடைய முக்கியமான இரு முகங்கள் சச்சினும் ஏ.ஆர்.ரஹ்மானும் என்பதை வைத்தே ஒரு காலமாற்றத்தின் சித்திரத்தை நாம் எளிதாக வரைந்து கொள்ளலாம். சச்சினோ ஏ.ஆர்.ரஹ்மானோ லட்சியவாதிகள் அல்ல; சமூக மாற்றம் பற்றிப் பேசியவர்கள் அல்ல; இரண்டு பேருமே தனிமனித சாதனையாளர்கள். சச்சினையும் ஏ.ஆர்.ரஹ்மானையும் தன் நாயகர்களாக ஏற்றுக் கொண்டதன் வழியே தொன்னூறுகளில் இந்தியா தனிமனித முன்னேற்றத்தை தன் கோஷமாகச் சுவீகரித்துக் கொண்டது என்றே சொல்லவேண்டும். லட்சியங்களின் சரிவு குறித்துக் கசப்புகளோடு இருந்த இளைஞர்கள் மறைந்து சுயமுன்னேற்றம் குறித்த கனவுகளோடு அடுத்தத் தலைமுறை இளைஞர்கள் புறப்பட ஆரம்பிக்கிறார்கள். இந்தியா நவீனமாகிறது. பிற்பாடு இந்த வளர்ச்சியின் விளைவாகப் பெருநகரங்கள் புது உருவம் அடையும். நுகர்வு கலாச்சாரம் பெருகும். சூழலியல் அழிவுகள் குறித்த கவலைகளும் கையறு நிலையும் உண்டாகும். உண்மைகள் குறித்துக் குழப்பம் ஏற்படும். நாம் இதைப் பின்நவீன உலகம் என்போம். இவை சமூக ரீதியான வரையறைகள்.  

Tuesday 3 April 2018

பாரஞ்சுமக்கிறவர்கள்

"ஒரு பாவி முழுமனதுடன் தன்னை நோக்கி பிரார்த்தனை செய்வதை ஒவ்வொருமுறை ஆகாயத்திலிருந்து பார்க்கும்தோறும் கடவுள் பேருவகை அடைகிறார். தன் குழந்தை முதன்முதலாகச் சிரிப்பதைக் காணும் அன்னையைப் போல்" 

- தஸ்தாவெய்ஸ்கி
 

மனித சமூகம் என்பது பல்வேறு நம்பிக்கைகளால் ஆனது; பல்வேறு மதிப்பீடுகளால் பிணைக்கப்பட்டது. ஆனால் இந்த நம்பிக்கைகள் என்பவையும் மதிப்பீடுகள் என்பவையும் உண்மையில் என்ன? அவற்றுக்குப் புறவயமான இறுதி விளக்கங்கள் உண்டா? அறம், நீதி, மன்னிப்பு, காதல் என நாம் நம் சமூகக் கதையாடல்களிலும் அன்றாடப் பேச்சுவழக்கிலும் பயன்படுத்துகிற எந்த அரூப கருத்துக்கும் திட்டவட்டமான வரையறைகளோ நிரந்தரமான விதிகளோ கிடையாது என்றே சொல்ல வேண்டும். புலன்களால் தொட்டு அறிய முடிகிற பொருட்களைப் போல் அவை மீற முடியாத அறிவியல் நியதிகளால் கட்டப்பட்டவை அல்ல. அணுக்களை பிளப்பதற்கும், இணைப்பதற்கும் அணுக்களின் ஆற்றலை கணிப்பதற்கும் நம்மிடையே அறிவியல் பகுப்புகள் உண்டு; முடிவுகள் உண்டு. ஆனால் குற்ற உணர்ச்சிக்கோ அல்லது மகிழ்ச்சிக்கோ அப்படி எந்த அளவீடும் கிடையாது. எனினும் நாம் விடாமல் அவற்றைப் பற்றிக்கொண்டிருக்கிறோம். அர்த்தம், லட்சியம் போன்ற இன்னப்பிற அரூப கருத்துக்களையும் அவற்றின் வழியாக உருவாக்கிக் கொள்கிறோம். 




பொதுவான விதிமுறைகள் இல்லாததனாலேயே இந்த நம்பிக்கைகளும் மதிப்பீடுகளும் தர்க்கம் மற்றும் காரணியத்துக்கு அப்பால் இருக்கின்றன. தோராயமாக இவற்றை இரு எதிர் நிலைகள் என்றே அழைக்கலாம். இவ்விரண்டுத்தரப்புகளுக்கும் இடையேயான முரணாலும் இடைவெளியாலும் தஸ்தாவெய்ஸ்கி பீடிக்கப்பட்டிருந்தார் என்றே கூறவேண்டும். அவரது "நிலவறைக்குறிப்புகள்" குறுநாவல் மனிதன், காரணியம் என்கிற இருமையை விசாரனைக்கு ஆட்படுத்துவதன் வழியே ஒரு தனிமனிதன் இயற்கை விதிகளின் எல்லைக்குட்பட்டவன் அல்ல என்பதையும் அவன் சுதந்திரமானவன் என்பதையும் நிறுவ முயற்சிக்கிறது; கூடவே தனிமனிதன் விதிகளுக்கு எதிரா மூர்க்கமாத் தீர்மாணத்துடன் இருப்பதால் அவன் செயலற்ற கையறு நிலையில் இருப்பவன் என்பதையும் அது அடிக்கோடாகச் சுட்டுகிறது. அசடன் நாவலில் இதே உரையாடல் அல்லது விவாதம் வேறொரு பரிமாணம் எடுத்து தனி மனிதன் என்பதிலிருந்து சமூகம் என்கிற அடுத்த அடுக்கிற்கு நகர்ந்திருப்பதையும், ஊடே அது நிலவறை குறிப்புகளை உட்செரித்துத் தன்னில் ஒரு பகுதியாக மாற்றியிருப்பதையும் நாம் காண்கிறோம். "தற்கொலை மட்டுமே என் சுயவிருப்பத்தால் (இயற்கையை மீறி) நானே தொடங்கி முடிக்கக்கூடிய ஒரே செயல்" என்று கூறுகிற இப்போலித்தில் நிலவறை மனிதனின் சாயலை நிச்சயம் அடையாளம் காணாமல் இருக்க முடியாது. இப்போலித் மட்டும் இன்னும் வாழ அனுமதிக்கப்பட்டிருந்தால் அவனும் நிலவறையின் இருட்டில்தான் தன் கதையைச் சொல்லத் தொடங்கியிருப்பான். 

Monday 19 February 2018

மீன்களை அறிதல்


கோவை ஞானி பற்றிய இப்பதிவில் ஜெயமோகன் கார்ல் மார்க்ஸின் “அன்னியமாதல்” (alienation) கோட்பாட்டை இவ்வாறு விளக்குகிறார். தொழிற்சமூகத்தில் உழைப்பாளிக்கு தான் உற்பத்தி செய்கிற பொருளோடு இணக்கமான உளத் தொடர்பு எதுவும் இல்லை. அவன் அங்கே படைப்பாளி கிடையாது; ஒரு உற்பத்திக் கருவி மட்டுமே. எனவே அவனுக்கு படைப்பாளியின் இன்பம் கிடைப்பதில்லை. முதலாளித்துவ சமூகத்தின் இந்த எதிர்மறை விளைவே ‘அன்னியமாதல்’. கீரனூர் ஜாகிர்ராஜாவின் “மீன்காரத் தெரு” நாவலை வாசித்து முடித்ததும் எனக்கு உடனடியாக ஜெயமோகனின் பதிவு யோசனையில் எழுந்தது. இந்த நாவல் முதன்மையாக மீன்காரத் தெரு மேல் பங்களாத் தெரு நிகழ்த்துகிற சுரண்டல் குறித்தும் அப்பகுதிகளில் நிலவும் ஜாதிய வேறுபாடுகள் குறித்தும் பேசுகிறது. ஆனால் அதனூடே நகரும் இன்னொருச் சரடும் மேற்சொன்ன சுரண்டலுக்கும் பாகுபாட்டிற்கும் நிகரான முக்கியத்துவம் உடையது என்றே எண்ணுகிறேன். மீன்காரத் தெருவின் உள்ளே நிகழ்ந்துக் கொண்டிருக்கும் மாற்றம் அது. நாவலில் முன்னதை குறிப்பிடும்போது வெளிப்படுகிற உணர்ச்சிகரமும் அதன் விளைவாக அவ்வப்போது எழும் ஓசைமிகுதியும் பின்னதில் கொஞ்சமும் இல்லை. குறைவானத் தருணங்கள் எனினும் அது அமைதியுடன் மிக இயல்பாக எழுதப்பட்டுள்ளது.


ஷேக்காவின் மகன்கள் - காசீம் மற்றும் நைனா. காசீம் கட்சி பணியில் இருக்கிறான். நைனா கலகக்குணமும் ரௌடித்தனமும் குழப்பமான விகிதத்தில் சேர்ந்த வார்ப்பில் இருப்பவன். சமூக மாற்றத்திற்காகவும் பணம் படைத்தவர்களின் அதிகாரத் திமிருக்கு எதிராகவும் இருவரும் வெவ்வேறு விதங்களில் குரல் கொடுக்கிறார்கள்; இயன்ற வழிகளில் போராடுகிறார்கள் என நாவலில் இருந்து புரிந்துகொள்ளலாம். (போராட்டம் என்கிற சொல்லின் வழக்கமான அர்த்தத்தில் இல்லை என்றாலும் எதிர்ப்பின் வெளிப்பாடு அல்லது மாற்றத்தின் தேடல் என்கிற பொருளில்). இவ்வகையான ஆவேச எதிர்ப்பு நியாயமானது என்பதிலோ அவசியமானது என்பதிலோ இரண்டாவது கருத்து இருக்க முடியாது. ஆனால் இவர்கள் இருவரும் பார்க்கத் தவறுகிற ஒரு விஷயம் இருக்கிறது என்பதையும் அது ஷேக்காவின் –மீனைப் பற்றி தெரிந்தவர்- கண்களுக்கு மட்டுமே தெரிகிறது என்பதையும் இங்கே கவனிக்க வேண்டும்.

Saturday 27 January 2018

999 வாழ்க்கை

நான் சமீபத்தில் இரண்டு மேற்கோள்களை தனியே குறித்து வைத்துக் கொண்டேன்.

ஒன்று “தத்துவத்தின் கதை” நூலின் முன்னுரையில் வில் டூரண்ட் சொல்வது, “காலம் கடப்பதற்கு முன்னால் பெரிய விஷயங்களை பெரியவை என்றும் சிறிய விஷயங்களை சிறியவை என்றும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்”

இரண்டாவது ஜெயமோகனுடையது, “பெரிய வாழ்க்கைகள் நினைவில் நிறுத்தப்படவேண்டும். அன்றாடமென வந்துசூழும் சிறுமைகளுடன் போரிட அவையே படைக்கலமென்றாகின்றன.”


கடந்த சில மாதங்களாக பெரிய புத்தகங்களுடனே அதிகமாக பொழுது கழிவதாலும் நிறைய பெரிய வார்த்தைகளை கற்றுக்கொள்வதும் மறப்பதும் குழம்புவதுமாக இருப்பதாலும் பெரிய விஷயங்கள், பெரிய மனிதர்கள் என தரைக்கே வராத ஆசைகளோடு அலைவதாலும் இவ்விரண்டு மேற்கோள்களும் என்னில் உடனடியாக பற்றி ஏறிக் கொண்டன என நினைக்கிறேன். எனினும் இந்த பெரியவைகளுக்கு நடுவே நான் அவ்வப்போது உணரும் பயமும் மேற்கொள்ளும் அற்பத்தனங்களும் உண்டு. தலைக்கு மேல் சுழலும் கண்கள் உறங்கும் நேரத்தில் சிறியவைகளின் ஜமாவில் அடைக்கலம் சேர்ந்துக் கொள்வேன். பெரியவை, சிறியவை – இரண்டும் ஒன்றையொன்று பார்த்துவிடாமல் இருக்க, என் இரட்டை வாழ்க்கையை அவை கண்டுபிடித்திடாமல் இருக்க, இரண்டிடமும் எனக்கு ஒரு இரட்டைச் சகோதரன் உண்டு என்று பொய் சொல்லி வைத்திருக்கிறேன். ஒட்டுத் தாடியும் ஒட்டு மீசையும் பையிலேயே எப்போதும் இருக்கின்றன. இன்று அந்த திரைப்படத்தின் உச்சக்காட்சி.