Friday 8 September 2023

சுஜாதாவின் “கணேஷ் – வசந்த்”

 எப்படி ஆரம்பித்தது தெரியவில்லை. ஒரு மாதத்தில் பத்துக்கு மேற்பட்ட கணேஷ்-வசந்த் நாவல்கள் வாசித்துவிட்டேன்.  “கிண்டில் அன்லிமிடெட்” ஒரு பொக்கிஷம்தான்.  மாதாமாதம் சந்தாவையும் வாசிப்பையும் கணக்கு போடும்போது லாபமா நஷ்டமா என்று குழப்பம் வந்தாலும் முக்கியமான பல நூல்கள் கிடைக்கின்றன. அரசு நூலகத்தில் ஒரே எழுத்தாளரின் நூல்களை வரிசையாக எடுத்து படிக்கும் அனுபவம் வாய்க்கிறது. தமிழில் “கிழக்கு” பதிப்பகம் அதிக எண்ணிக்கையில் பதிவேற்றியிருக்கிறது. சுஜாதாவின் பல புத்தகங்கள் கிடைக்கின்றன.  திரைப்படங்களுக்கு ஓ.டி.டி போல புத்தகங்களுக்கு இனி கிண்டில் அன்லிமிடெட். 

1968ல் தான் சுஜாதா முதல்முறையாக கணேஷ் எனும் கதாபாத்திரத்தை உருவாக்குகிறார். 1973ல் கணேஷின் உதவியாளராக வசந்த் சேர்ந்துகொள்கிறார். இந்த வக்கீல் இரட்டையர்களை வைத்து 25க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியிருக்கிறார். 35 வருடங்கள் வயதே ஆகாமல், பல குற்றங்களை துப்பறிந்திருக்கிறார்கள். ஷெர்லாக் ஹோம்ஸ்- டாக்டர் வாட்சன் போல தமிழில் ஒரு துப்பறியும் ஜோடி. பீரும் ரெமி மார்டினும் குடித்தபடி சீரியல் கில்லர்களை கண்டுபிடிக்கிறார்கள். பண மோசடிளை வெளிக் கொண்டு வருகிறார்கள். சதி திட்டங்களை முறியடிக்கிறார்கள். சென்னை முழுக்க - பூந்தமல்லியிலிருந்து கடற்கரை சாலை வரை - சுற்றுகிறார்கள். நடுவே அவ்வப்போது நீதிமன்றத்தில் வழக்கு நடத்துகிறார்கள். புத்திசாலியான வக்கீல்கள். நீதி நியாயம் பற்றி பொதுவாக பேசிக் கொள்வது கிடையாது.