2023ம் வருடத்தின் சாகித்திய அகாடெமி விருது "நீர்வழி படூஉம்" நாவலுக்காக தேவிபாரதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த நாவல் இன்னும் வாசிக்கவில்லை. ஆனால் தேவிபாரதி மேல் மதிப்பு கொண்டவன் என்கிற முறையில் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறேன்.
தமிழில் தேவிபாரதி,ஜீ.முருகன்,லஷ்மி மணிவண்ணன் என்று காஃப்காவிய கூறுகளை வெவ்வேறு அளவுகளில் வெளிப்படுத்திய எழுத்தாளர் நிரையொன்றுள்ளது. உருவகத்தன்மை ஒரு முக்கிய பொது அம்சம். இது "கொந்தளிப்பு" போன்ற கதைகளில் சு.ரா தொடங்கிவைத்து ஆனால் முழுமையாக வளர்த்தெடுக்காத பண்பு என கருதுகிறேன். "நட்ராஜ் மகராஜ்" நாவலின் கடைசி பகுதியில் காஃப்காவின் நீதியின் வாசல் சாயலை எளிதில் கண்டுபிடிக்கலாம்.நிழலின் தனிமை நாவலும் எனக்கு பிடித்ததே. "பலி" போன்ற புகழ்பெற்ற அவருடைய ஆரம்பக்கட்ட கதைகள் எனக்கு உவப்பானவையல்ல. ஆனால் அவருடைய நெடுங்கதைகள் கூடுதல் கவனம் கோருபவை.
"பிறகொரு இரவு" சந்தேகமேயில்லாமல் தமிழில் எழுதப்பட்ட சிறந்த கதைகளில் ஒன்று.காந்தி,டால்ஸ்டாய் இருவரும் தேவிபாரதியின் ஆதர்சங்கள்.அக்கதையில் இருவருமே ஆழமாக வெளிப்படுகிறார்கள்.டால்ஸ்டாய் போல, ஒரு ரயில் நிலையத்தில் அனாதையாக அமைதியாக மரணிக்க காந்தி விரும்புகிறார்.ஆனால் மொத்த தேசமும் அவரை துப்பாக்கி முனைக்கு போகச் சொல்கிறது. "செத்துப் போ!செத்துப் போ!" என்கிறது. கடைசியில் காந்தியும் அக்கொலைக்களத்தினை தேர்வு செய்கிறார். காந்தியின் ஆன்மீக போராட்டம் வலுவாக அக்கதையில் பதிவாகியிருக்கும்.