Wednesday 20 April 2022

குணச்சித்திரன் பராக்

‘உடைந்து எழும் நறுமணம்’ தொகுப்பின் முன்னுரையை இசை இப்படித் தொடங்குகிறார்:  “என் கவிதைகளின் அடையாளமாகச் சொல்லப்பட்ட பகடி இயல்பு சமீபத்திய தொகுதிகளில் படிப்படியாகக் குறைந்து இதில் மேலும் அருகியுள்ளது.” ஒரு கவிஞரின் அடையாளம் ஏன் உருமாறுகிறது? அது முழுக்கமுழுக்க அவருடைய தேர்வுதானா? பொதுப்போக்காக மாறி பகடி சலிப்புத் தட்ட ஆரம்பித்திருக்கும் சூழலில் கவிஞர் தன் அடையாளத்தைத் துறக்க வேண்டியது காலத்தின் நிர்ப்பந்தமா? இப்படி வெவ்வேறு கேள்விகளை கேட்பது சுவாரஸ்யமான விசாரங்களுக்கு வழி வகுக்கும். ஆனால் மற்ற விஷயங்களைக் காட்டிலும், இந்தத் திசைமாற்றம் இசையின் இதுவரையிலான கவிதைகளைத் தொகுத்துப் புரிந்துகொள்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறது. திருப்பத்தில் நுழைவதற்கு முன்னால் வந்த வழியை ஒருதடவை சரி பார்த்துக் கொள்வதுபோல. மேலும், ஒரு குறிப்பிட்ட கவிஞரின் கவிதைகளைப் புரிந்துகொள்வது என்பது அக்கவிதைகள் உருவாகி நிலைப்பதற்கு காரணமாய் இருக்கக்கூடிய சூழலையும் புரிந்துக்கொள்வதுதான். 


O

நீர்வழி (சிறுகதை)

தண்ணீர் உள்ளே வந்துவிடுமோ என்று பயந்து பயந்து வீட்டுக் கதவை திறக்க வேண்டியிருந்தது. ஓரடிக்கு வாசல் சட்டத்தில் செங்குத்தாக பலகை வைத்து அடைத்திருந்தபோதும் பயம் இருந்தது. மழைநீர் வாசல் படி வரை வந்துவிட்டது. இரவு முழுக்க மழை அப்படிக் கொட்டித் தீர்ந்திருந்தது. மழை ஓய்ந்த அமைதியும் மழையையே நினைவூட்டியது. சிறுவன் பலகையை தாண்டி வீட்டைவிட்டு வெளியே வந்து தண்ணீரில் இறங்கினான். அரைக்கால் சட்டை போட்டிருந்ததால் நீரின் சில்லிடும் குளுமை அவன் கால் மயிர்களை சிலிர்க்க வைத்தது. படியில் இறங்கி சாலைக்கு வந்தபோது முட்டிக்காலுக்கு மேலே தண்ணீர் போனது. அவன் கூசியபடி சிரித்து அம்மாவை பார்த்தான். புடவையை லேசாக உயர்த்தி பிடித்தபடி காலைத் தூக்கி பலகையை கடந்து அம்மாவும் தண்ணீரில் இறங்கினாள். வீட்டைப் பூட்டிவிட்டு சிறுவன் கையை பிடித்துக் கொண்டு நடக்கத் தொடங்கினாள். ஏரி வளர்ந்து அப்பகுதி தெருக்களை பாதி மூழ்கடித்திருந்தது. வீடுகள் தண்ணீரில் புதைந்திருந்தன. சாலையும் முங்கியிருந்தது. நிலம் கீழே நீரை உறிந்துத் தீர்க்க முயன்றுக் கொண்டிருந்தது. அம்மா ஒவ்வொரு அடியையும் ஜாக்கிரதையாக எடுத்து வைத்தாள். தண்ணீரில் என்னென்னவோ மிதந்து வந்தன. காட்டாமணி செடியின் பழுத்த இலை. பழையத் துணி. மரத் துண்டு. ஆளில்லாத தெர்மக்கோல் படகு. சிறுவன் அதை எட்டி பிடிக்க முயன்று தண்ணீரை வாத்துப் போல் அறைந்தான். தடுமாறி கிழே விழப் பார்த்தவனை அம்மா தூக்கி நிறுத்தினாள்.