Saturday 21 October 2017

குளிர்

எதிர்பார்க்காத குளிர். இன்று விடியற்காலை சென்னை வந்திறங்கியது முதல் உடல் குளிரில் நடுங்கி உதறியபடியே இருக்கிறது. நான் அணிந்திருந்தது அரைக்கை சட்டை வேறு. முழங்கைகளை பிணைத்துக் கட்டினால் உள்ளங்கை ஜில்லிட்டு கூசியது. ரயில் நிலையத்தில் கூட்டம் இல்லை. ரயில் வருகிறதா என்று தண்டவாளத்தோடு பார்த்தேன். கண் தூரம் வரைக்கும் வானம் இருள் பரப்பாக தாழ்ந்திருந்தது. அடுத்த ரயில் எப்போது என்று பயணச் சீட்டு கொடுக்குமிடத்திற்கு பக்கத்தில் இருந்த பெரிய நேர அட்டவணையில் தேடினேன். இன்னும் அரை மணி நேரம் இருந்தது. சோர்வுடன் கையில் பிடித்திருந்த துணிப்பையை கீழே வைத்தேன்.


குளிர் குறைவதுப் போல் தெரியவில்லை. பையில் அவசரத்திற்கென்று வைத்த ஒரு குளிர் சால்வை உண்டு.  ஆனால் அதை தேடி எடுக்க வேண்டும். துவைக்காத அழுக்குத் துணிகள் சுருட்டிக் கிடக்கும் பையை பிரித்து துழாவுவதற்கு அசூயையாக இருந்தது.

குளிர் பொறுக்காமல் சூட்டிற்காக கைகளை உரசி கன்னத்தில் வைத்தேன். பெரிய வித்தியாசம் எதுவும் தெரியவில்லை. ரயில் நிலையத்திற்கு பின்னால் , சந்தை தெருவில் கடை வாசல்கள் தோறும் கூட்டி பெருக்கி நீர் தெளித்துக் கொண்டிருந்தார்கள்.  சாலைக்கு மறுபக்கம் இருந்த பால் கடையில் அப்போதுதான் பால் வரத்து நிகழ்ந்துக் கொண்டிருந்தது. லாரியில் வந்த பால் டப்பாக்களை இறக்கி வைத்து வரிசையாக அடுக்கிக் கொண்டிருந்தார்கள். இன்னொருபக்கம் இறக்கிய டப்பாக்களை பையன்கள் வேகமாக சைக்கிளில் ஏற்றி வீடுகளுக்கு கொடுக்க விரைந்து கொண்டிருந்தார்கள். கடை முதலாளி போலிருந்தவர் ஒவ்வொரு டப்பாவையும் கணக்கெடுத்து ஒரு சின்ன சீட்டில் குறித்துக் கொண்டிருந்தார். அந்த கடையைத் தவிர சுற்றி வேறெங்கும் பெரிதாக சலனம் இல்லை.

பயண அசதியில் எனக்கு முதுகு வலிப்பது போல் இருந்தது. அங்கிருந்து விலகி அலைபேசியில் இயர்போனை பொருத்தி பாட்டுக் கேட்டவாறு ரயில் நிலையத்தின் சிமென்ட் இருக்கையில் வந்து அமர்ந்தேன். பக்கத்தில் தேநீர்க் கடையில் வானொலி சத்தமாக பாடிக் கொண்டிருந்தது. என் காதில் கேட்டுக் கொண்டிருந்த பாடலும் கடையின் ஒலிப் பெருக்கி பாடலும்  ஒரு மாதிரி கலவையாகி வெறும் இரைச்சலாக மீந்தன. நான் என் அலைபேசியில் பாட்டு சத்தத்தை கூட்டினேன். ஒன்றிரண்டு நிமிடங்களில் காது வலிப்பது போலானது. இயர்போனை கழற்றி கால்சராயில் வைத்துவிட்டு நிமிர்ந்து பார்த்தேன். கதிர் எழும் தடயமே எங்கும் இல்லை. வானில் இருள் விலகி பனித் திரை விழுந்திருந்தது. எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கும் அசைவற்ற பெரும் உயிர் போல்  பனி கண் நிறைய எங்கிலும் இருந்தது.

அப்போது மத்திம வயதை கடந்த இரண்டு பெண்கள் உயரமான நீல நிற பிளாஸ்டிக் பைகளை தூக்கியபடி வந்து எனக்கு அடுத்து இருந்த இருக்கையில் அமர்ந்தார்கள். இரண்டு பேருமே குளிருக்காக தலையைச் சுற்றி கழுத்துக்குட்டை அணிந்திருந்தார்கள். விடிவதற்கு முன்பே அவர்கள் குளித்து முடித்து குங்கும முகத்தில் புத்துணர்ச்சியோடு இருப்பதை பார்த்ததும் தூக்கக் களைப்பில் என் முகம் காய்ந்து வாடியிருப்பது உணர்ச்சியில் தட்டியது. அனிச்சையாக கைக்குட்டையால் முகத்தை அழுத்த துடைத்துக் கொண்டேன்.  அவர்கள் கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் பைகள் பெரிதாக இருந்தன. ஆனால் கனமாகத் தோன்றவில்லை. முதலில் ஏதோ உடுப்புத்துணி என்று நினைத்தேன். பின்னர் அவர்கள் அவற்றை பிரித்தபோதுதான் உள்ளே சாமந்தி பூக்கள் குவிந்து கிடப்பது தெரிந்தது.  இருவரும் முந்தானையில் பூக்களை கொட்டி வைத்து பேச்சுக் கொடுத்தப்படியே நூல் கோர்த்து அவற்றை தொடுக்க ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்திற்கு நூலோடு வேகமாக இழைந்து ஓடி பூக்களை இணைத்து விலகும் அவர்களின் விரல்களையே பார்த்துக் கொண்டிருந்தேன்.  பின் அதில் சுவாரஸ்யமிழந்து அலைபேசியை எடுத்து நேரம் பார்த்துவிட்டு திரும்பவும் பையில் வைத்தேன்.

மரங்களில் சாய்ந்து வீசிய மென் காற்றில் சாமந்தி மணமும் கலந்து வந்தது. அது நாசியில் மயக்கமாக தங்க இன்னொருபுறம் பனியில் தலையைச் சுற்றி குளிரேறிக் கொண்டிருந்தது. காதுகளை அழுந்த மூடி கால்களுக்கு நடுவே முகத்தை புதைத்துக் கொண்டேன். அருகில் யாரோ நடந்து வரும் காலடி சத்தம்  கேட்டது. இயல்பாக திரும்பி பார்த்தேன். நல்ல உயரமும் கனமும் கூடிய வாட்டசாட்டமான மனிதர். மடிப்பு விழாத படு நேர்த்தியான உடை. பளபளவென்றிருந்த  போலீஸ் காலணிகளில் சீராக அடிவைத்து நடந்து வந்தார்.  அவரைக் கண்டதும் பூக்கட்டிக் கொண்டிருந்தவர்களில் ஒருத்தி “வணக்கம் சார்”  என்று பூக்கள் விழாதவாறு முந்தானையை பத்திரமாக பிடித்துக் கொண்டு பாதிக் கையில் வணக்கம் வைத்தாள். மற்றவள் எதுவும் சொல்லாமல் மரியாதையாக சிரிக்க, காவல் அதிகாரி இருவரையும் பார்த்து “வணக்கம். வணக்கம்” என்று சொல்லிவிட்டு என் பக்கத்தில் உட்கார்ந்துக் கொண்டார். அதுவரைக்கும் காலியாக இருந்ததுப் போலிருந்த சிமென்ட் பெஞ்ச் அவர் உட்கார்ந்ததும் அடைத்துக் கொண்டதுப் போலானது.

காவல் அதிகாரி என்பதாலேயே என்னில் ஒரு சின்ன ஜாக்கிரதை உணர்வு தொற்றிக் கொண்டது. அது ஜாக்கிரதை உணர்வா அல்லது பயமா என்று துல்லியமாக சொல்ல முடியவில்லை. அவரை பார்ப்பதை தவிர்த்தேன்.

நாங்கள் அமர்ந்திருந்த சிமென்ட் இருக்கைக்கு பின்னால் ரயில் நிலையத்தின் வெளிப்புறச் சுவர் சிதைந்து பிளந்திருந்தது. அதை ஒட்டிய புதர் சூழ்ந்த ஒற்றையடி பாதையில் ஒரு ஆள் விக்கி விக்கி நடந்துவருவதை  பார்த்தேன். அவருடம்பில் இடது கை மட்டும் தான் தெரிந்தது. வலது கை சட்டைக்குள் இருக்கும் என நினைத்துக் கொண்டேன். காயம்பட்டு கட்டுப்போட்டிருக்கலாம். அல்லது வலது கையே இல்லாமலும் இருக்கலாம். சரியாக அனுமானிக்க முடியவில்லை. வெளிப்புற  பாதைக்கும் ரயில் நிலைய நடைமேடைக்கும் நடுவே பள்ளமாக இருந்தது. கொஞ்சம் ஆழமான பள்ளம். அதனாலயே அந்த வழி பயன்படுத்தப்படாமல் பழக்கத்தின் சுவடற்று இருந்தது. வளர்த்தியான மனிதர் என்றால் பரவாயில்லை.  அவர் குள்ளம். நடைமேடையில் ஒரு கையை ஊன்றி மூச்சுபிடித்து எக்கி மறுபக்கம் புரண்டு தவழ்ந்தே அவர் மேலே ஏறினார். சுற்றி நடந்து அவர் நேர் பாதையிலேயே வந்திருக்கலாம். ஒற்றை கையில்,இது வேண்டாத கஷ்டம்.  ஆனால் அவர் சிரமம் எதையும் காட்டிக் கொள்ளாமல் துள்ளலாக எழுந்து அழுக்கு சட்டையில் ஒட்டிய மணலை துடைத்துக் கொண்டார். இப்போது அவரை என்னால் தெளிவாக பார்க்க முடிந்தது. வலது கையை சட்டைக்குள் தான் மறைத்திருந்தார். அது துண்டுபடவில்லை. ஆனால் நடக்கும்போது லேசாக ஒரு பக்கம் தாங்கினார். சட்டை, கால்சராய்க்கூட நைந்து சாயம் போயிருந்தது.  இருந்தும் உடல்மொழியில் ஒரு அசாதாரணமான உற்சாகம்.

பழக்கமானவர் போல் அவர் நேராக காவல் அதிகாரிக்கு பக்கமாக சென்றார். செல்லும்போது வழியில் என் துணிப்பையை அவர் மிதிப்பதுப் போல் வர நான் அதை தள்ளி வைத்தேன். காவல் அதிகாரி அவரை கண்டுகொள்ளவில்லை. அவர் இன்னும் பக்கத்தில் போய் கூன் போட்டு குழைந்து சிரித்தார். காவல் அதிகாரி முகம் கொடுக்காமல் “என்னடா?” என்றார்.

“ஆங்…ஆங்” அவருக்கு குரல் வரவில்லை. ஊமை வாய் முழுக்க சிரித்து ஒற்றைக்கையில் வணக்கம் மட்டும் வைத்தார். “ஆங்…ஆங்”

“சரி போ”. காவல் அதிகாரி விரட்டுவது போல் சொன்னார்.

அவர்  அகலவில்லை. ஒரு அடி பின்னால் நகர்ந்து  பரிதாபமாக பார்த்தார். பின் பொறுமையாக சட்டைக்குள் கை நுழைத்து வலது கையை எடுத்து வெளியே தொங்கவிட்டார். முட்டி எலும்பில் இணைப்பு முறிந்திருப்பது போல் முழத்திற்கு கீழே வலது கை தனிச் சதையாக ஆடியது.  என்னை தாக்கியது குரூரமா அருவெறுப்பா என்று பிரித்து சொல்ல முடியவில்லை. உடனேயே அதை மறைத்துக் கொள்ள விரும்பினேன். ஆனால் மனம் அடங்கவில்லை. கண்களை விலக்க இயலாமல் மறை பார்வையில் அவருடைய  வலது கையையே பார்த்துக் கொண்டிருந்தேன். வெளிக்காயம் எதுவும் இல்லை. ஆனால் அவரது முழங்கை உடைந்து துவண்டிருந்தது. சுண்டிவிட்ட எலாஸ்டிக் நூல் கடைசி விசையில் மெல்ல அதிர்வது போல் அது முன்னும் பின்னும் ஆடியபடி இருந்தது.  அவர் அதை இன்னும் அதிகம் அசைத்தவாறு காவல் அதிகாரிக்கு அருகாமையில் சென்றார். “ஆங்…ஆங்”. அவர் குரல் இரைந்து யாசித்தது. காவல் அதிகாரி அதை கேட்காததுப் போல் அமர்ந்திருக்க, அவர் சற்று குரலை உயர்த்தி மறுபடியும் “ஆங்…ஆங்” என்றார். காவல் அதிகாரி அவரை பொருட்படுத்தவே இல்லை. உடனே அவர் இடது கையால் தன் வலதுப் புற முழங்கையை வேகமாக ஆட்டிவிட்டார். அது தானாக ரப்பர்த் துண்டு போல் வேகமாக ஆடியது. எந்த நொடியும் பிய்ந்து தனியே கீழே விழுந்துவிடும் என்பது போல். எனினும் அவரிடம் வலி தெரியவில்லை. பொம்மை விளையாட்டு என திரும்பவும் அவரே முழங்கையை பிடித்து நிறுத்தினார். காவல் அதிகாரி துளிக்கூட அசைந்துக் கொடுக்கவில்லை. எனக்கு தான் அக்காட்சியை பார்க்கவே மனம் திணறியது. இன்னொரு பக்கம் பனி வேறு. குளிருக்காக மீண்டும் கைகளை இணைத்து கட்டிக் கொண்டேன். என் முழங்கைகளின் ஆரோக்கியத்தை திடத்தன்மையை உணரும்போதே எதிரே அவர் பஞ்சுப் பொதிப் போல் தன் கையை அசைத்து இரைஞ்சுவது கண்களிலேயே தேங்கிக் கொண்டிருந்தது.

“ஆங்…ஆங்”.

நடுங்கி ஒடுங்கும் மிருகத்தின் சத்தம். ஆனால் அவர் குரலில் வலியின் துடிப்பே இல்லை.  அதுதான் என்னை கூடுதலாக அச்சமூட்டியது.  பையில் இருந்து காசை எடுத்து கொடுக்கலாமா என்று எனக்கே உறுத்தியது. ஆனால் அவர் என்னை கடந்தே காவல் அதிகாரியின் பக்கம் சென்றார். ஏன் என்னிடம் பிச்சை கேட்கவில்லை? காவல் அதிகாரியிடம் தெரியும் பிடிவாதமும் பரிச்சயமானத் தோரணையும் கூட என்னை குழப்பின. பூக்காரப் பெண்கள் சாமந்தியை தொடுத்தபடி அவ்வப்போது இங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

சர்க்கஸ்காரன் அடுத்த வித்தைக்கு நகர்கிற மாதிரி அவர் இம்முறை தன் முழங்கையை பின்பக்கமாக மடக்கி பிடித்து பிறகு கீழே தொங்கவிட்டார். இரண்டு தடவை அதேப் போல் அவர் வலது கையை மடக்கி மடக்கி தொங்கவிட  காவல் அதிகாரி வெறுப்பாக “என்னடா வேனும் உனக்கு?” என்றார்.

“ஆங்..ஆங்”.அவர் தேநீர் கடையை சுட்டிக் காட்ட,  காவல் அதிகாரி சலிப்பாக தலையை தடவினார். உணர்ச்சி காட்டாமல், “இந்தா” என்று தன் சட்டைப் பையிலிருந்து இருபது ரூபாய் தாளை எடுத்து அவரிடம் கொடுத்தார்.அதுவரை பரிதாபமாக பார்த்துக் கொண்டிருந்தவர் உடனேயே உற்சாகமாகி இடது கையால் காவல் அதிகாரிக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு காசைப் பெற்றுக் கொண்டு தேநீர்க் கடையை நோக்கி நடந்தார்.  அவர் தாங்கி நடந்து விலகியதும் காவல் அதிகாரி என் பக்கம் திரும்பி ஏளனமாக புன்னகைத்தார்.   நானும் மழுப்பலாக சிரித்தேன்.

“மோசமான ஆள் தம்பி அவன்.” தேநீர்க் கடையின் திசையில் கண்ணோரமாக பார்த்துவிட்டு எச்சரிப்பதுப் போல் தொடர்ந்தார். “பார்க்கத்தான் கிறுக்கன் மாதிரி இருப்பான். ஆனா வெவகாரமானவன். பலே ஆள். சைக்கிள் திருடன்”

“அவரா?”.எனக்கு ஏதோ தொடர்பில்லாத வேறு விஷயம் பற்றி பேசுவது போலிருந்தது.

“அவனே தான். எந்த பூட்டையும் அசால்ட்டா ஒடைச்சு சைக்கிள திருடிருவான். எத்தனையோ வாட்டி சொல்லி பார்த்தோம். கேக்கவே இல்ல. அப்புறம் நாங்கதான் கைய ஒடைச்சு அனுப்பிட்டோம்”

நான் புரியாமல் விழிந்தேன். “நீங்களா?”என கேட்டு, பின் திக்கி “இல்ல. யாரு?யார சொன்னீங்க?” என்றேன்.

“நாங்கதான். ஸ்டேஷன்ல வச்சி ஒடைச்சு விட்டோம். பின்ன சொன்னா கேக்கனும்ல? ஊர்ல இருக்குறவன் பொருள எல்லாம் எவ வேணும்னாலும் தூக்கிட்டு போலாம்னா அப்புறம் எதுக்கு போலீஸ்?என்ன சொல்றீங்க”

எனக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியவில்லை. மழுப்பலாக தலையாட்டினேன்.
“ஆங்…ஆங்”. தேநீர் கடைக்கு பக்கத்தில் நின்று சூடான காகித கோப்பையை கையில் பிடித்தவாறு அவர் காவல் அதிகாரியை நோக்கி சத்தம் கொடுத்தார்.
“என்னடா?”. காவல் அதிகாரியின் குரல் அதட்டலாக ஒலித்தது.

அவர் தன் கையில் இருந்த தேநீர் கோப்பையை காவல் அதிகாரியை நோக்கி நீட்டி உயர தூக்கி சமிக்ஞை காண்பித்தார். “எனக்கு வேணாம். நீயே குடி” என்று கூறிவிட்டு என் வசம் திரும்பி “நக்கல பார்த்தீங்களா?” என்றார் காவல் அதிகாரி.

என் மனம் வேறு யோசனையில் தன்னை இழந்துக் கொண்டிருந்தது. கடை வாசலில் நின்று இடது கையில் கோப்பையை பிடித்து வாயால் ஊதி ஊதி தேநீர் பருகிக் கொண்டிருந்தார் அவர். வலது முழங்கை தளர்ந்து தொங்கிக் கொண்டிருந்தது. பலவீனமான ஒரு மெல்லிய ஜவ்வுதான் அந்த முழங்கையை இன்னும் விழாமல் பிடித்துக் கொண்டிருக்கிறது.தோலுக்கடியே ரத்த வரியோடிய உள்சதை பரப்பு, தசை நார்கள், எலும்புகளை இணைக்கும் ஜவ்வு என எல்லாமும் ஒரே நேரத்தில் கவிச்சையாக என் மனதில் எழுந்தன. மனித உடலில் எல்லாமே வலுவற்றவை. சின்ன சமன் குலைவில் பிசகிவிடுபவை. நொறுங்குபவை. சாதாரண பேனாக் கத்தியில் கிழிந்துவிடுபவை. போலீஸ் அடியில் உடைபவை. பக்கத்தில் காவல் அதிகாரி எழுந்து நின்று நெட்டி முறித்து மறுபடியும் உட்கார்ந்துக் கொண்டார்.  எப்படி அவர் அந்த முழங்கையை உடைத்திருப்பார் என்று யோசித்தேன். லட்டியால் ஓங்கி அடித்து அல்லது கையை வெறித்தனமாக முறித்து மடக்கி… தூரத்தில் ஒரு ராட்சஸ ஓங்காரம். தொடர்ந்து தொண்டை அலறும் வலி ஓலம். பயமாக இருந்தது.

அலைபேசியை எடுத்து நேரம் பார்த்தேன். ரயில் வர வேண்டிய நேரம் தாண்டி தாமதாகிக் கொண்டிருந்தது. சீக்கிரம் வீட்டுக்கு போக வேண்டும். குளிர் வேறு தணியாமல் எரிச்சல் ஏற்படுத்தி கொண்டிருந்தது. அதற்குள் அவர் தேநீர் குடித்துவிட்டு மறுபடியும் எங்கள் திசையில் நடந்து வந்தார். காவல் அதிகாரியை கடக்கும்போது இடது கையால் வலது கையை தூக்கி வணக்கம் வைத்து விலகினார். நான் அவரை தவிர்ப்பதற்காக தண்டவாளத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் என்னை தாண்டி சென்றார். “க்ரீச்” என்று எதிர் நடைமேடையில் ஒரு ரயில் தேய்ந்து நின்று பின் “பாங்” என்று கணைத்து கடந்துச் சென்றது.  ரயில் சத்தம் தடதடத்து ஓய்ந்தபோது அருகாமையில் யாரோ மூர்க்கமாக காறி உமிழும் சத்தம் கேட்டு நான் துணுக்குற்று திரும்பினேன்.

“ச்சீ.பொறம்போக்கு”.பூக்காரிகளில் ஒருத்தி கை உடைந்த ஊமையனை பார்த்து கத்திக் கொண்டிருந்தாள். “பொறுக்கி நாய். எச்சக்கலை”

அவள் காறி துப்பியதில் சட்டை மேல் படிந்த எச்சிலை துடைத்துவிட்டு அடிக்குரலில் சத்தமாக சிரித்தார் அவர்.பின் ஒரு காலை ஊன்றி சுழன்று நடைமேடையில் இருந்து குதித்து மண்ணில் விழுந்து எழுந்து காய்ந்த மணல் பாதையில் விக்கியவாறே நடந்து சென்றார். நீல பிளாஸ்டிக் பைக்கு அண்டையாக  தரையில் எச்சில் தடம் நுரையோடிருக்க அவர் விகாரமாக சிரித்தது மிஞ்சிய எதிரொலிப் போல் இன்னும் கேட்டது.

இன்னொரு பூக்காரி திட்டிக் கொண்டிருந்தவளின் கைபிடித்து “என்னக்கா?” என்று பதற்றமாக கேட்டாள்.
அவள் மெல்ல “இப்படி பண்ணி காட்டுறான் பொறம்போக்கு” என்று கையை மேலும் கீழும் அசைத்து சைகை காட்ட, கேள்விக் கேட்டவள் தலையிலடித்து “ச்சே பன்னாடை.” என்றாள். “அவனுக்கு போய் அந்தாள் காசு கொடுக்குறான் பாரு. அவன் ஒரு பைத்தியக்காரன் ”. தலை குனிந்தவாறு காவல் அதிகாரியை சுட்டி கிசுகிசுப்பாக சொல்லிவிட்டு அவள் மீண்டும் பூ தொடுக்கலானாள்.  காவல் அதிகாரி எதையும் கவனிக்கவில்லை.அவர் அலைபேசியில் என்னவோ செய்துக் கொண்டிருந்தார்.

 “ஆமாக்கா.அவனுங்கள விடு” என்று மற்றவள் பிளாஸ்டிக் பையில் முந்தானையை உதறி உதிரிப் பூக்கள் கொட்டிவிட்டு “யக்கா…புட்லூர்ல யாரோ ஒரு பொண்ணு வயித்துல பாம்பு வளருதாம். என் புள்ள கூட்டினு போய் காமினு உயிர எடுக்குறான்.. நாளைக்கு வர்றியா?போயிட்டு வந்துருவோம்” என்றாள்.

“வவுத்துல பாம்பு வளருதா? என்னடி சொல்ற?”

“ஆமாக்கா. இப்போதான் கலியானம் ஆன பொண்ணாம். முழுகாம இருக்கான்னுட்டு ஆஸ்பித்திரிக்கு கூட்டினு போயிருக்காங்க. அங்க மெசின்ல படம் புடிச்சு பார்த்தா வயித்துல பாம்பு வளருதாம். என் புள்ள நெட்டுல பாத்து சொன்னான்”.

“பார்ரேன்டி அம்மா.” அவர்கள் ஆச்சர்யமாக பேசிக் கொண்டிருக்க, நான் அயர்ச்சியோடு எழுந்தேன். “திருவள்ளுவர் வரை செல்லும் அடுத்த ரயில் பத்து நிமிடங்கள் தாமதமாக வந்து சேரும்” என்று ஒரு கரகர குரல் ஒலிபெருக்கியில் அறிவித்துக் கொண்டிருந்தது. நான் என் துணிப்பையை திறந்து சால்வையை தேட ஆரம்பித்தேன். குளிர் விடுவதாக தெரியவில்லை.

***

நன்றி : பதாகை


1 comment:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete