Saturday, 29 January 2022

ஒளி மின்னும் பொருட்கள் 6 – பெருங்கால்வாயின் வழியே (ஷின் க்வான்)

 செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “பயணம்” எனும் பிரிவில் சீனக் கவிஞரான ஷின் க்வானின் (1049 – 1101) “பெருங்கால்வாயின் வழியே” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. 

“நீர் வழி பயணமானது மற்ற வகை பயணங்களைவிட காலத்தால் மூத்தது. எனவே, கப்பல் பயணத்திற்கு கவிதையில் முக்கியமான இடம் இருக்கிறது. நதிகளுக்கும் கால்வாய்களுக்கும் சீனாவில் உள்ள முக்கியத்துவத்துக்கு சாட்சியாக சீன கவிதையிலும் கப்பல் பயணம் இடம்பெற்றுள்ளது” -செஸ்லா மிலோஷ்

பெருங்கால்வாயின் வழியே

என் சிறிய படகின்
மேற்தளத்தில்
பனித் தூவல்கள் உறைந்திருக்கின்றன
தண்ணீர்
தெளிந்தும் அசைவற்றும் இருக்கிறது
எண்ணிலடங்கா குளிர் நட்சத்திரங்கள்
படகுடன் நீந்தி வருகின்றன
அடர்த்தியான நாணற் புதர் கரையை மறைத்திருக்கிறது
பூமியினையே கடந்துவிட்டதாக நீங்கள் நினைக்கக்கூடும்
அப்போது திடீரென்று கேட்கத் தொடங்குகின்றன
சிரிப்பும் பாடலும்


Friday, 28 January 2022

ஒளி மின்னும் பொருட்கள் 5 – காட்டு வாத்துகள் (மேரி ஆலிவர்)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில்“இயற்கை” எனும் பிரிவில் அமெரிக்க கவிஞரான மேரி ஆலிவரின் (1935 – 2019) “காட்டு வாத்துகள்” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. இயற்கையை மையப்படுத்தி தன் கவியுலகை சமைத்துக் கொண்டவர் மேரி ஆலிவர்.

“இருபதாம் நூற்றாண்டு இலக்கியத்தில் எண்ணற்று பதிவான மறுப்புவாத (nihilism) அனுபவங்களை பார்க்கையில், இயற்கையுடனான தொடர்பையும் அதன் வழியே மனிதர்கள் உணர்ந்துகொள்ளும் ஞானத்தையும் ஒருவர் பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த அனுபவங்களுக்கு தர்க்கபூர்வமான விளக்கங்கள் கிடையாது. பிரபஞ்சமயமான ஒரு தாளத்தை உணர்ந்துகொள்வதே இதில் மிக முக்கியமானது. நாமும் அந்த தாளத்தில் ஒரு பகுதியே. அதற்கு நம் ரத்தவோட்டத்துக்கே நாம் நன்றி சொல்ல வேண்டும். மேரி ஆலிவரின் இந்த கவிதையில் நன்மை, தீமை, குற்றவுணர்ச்சி, மனக்கசப்பு எல்லாமே மனித உலகுக்குரியவையாக உள்ளன.  அதற்கப்பால் உள்ள இன்னோர் அகன்ற உலகம் தன் இருப்பையே மானுடத் துயரங்களை கடப்பதற்கான அழைப்பாக மாற்றியிருக்கிறது” - செஸ்லா மிலோஷ்

Mary Oliver

Thursday, 27 January 2022

ஒளி மின்னும் பொருட்கள் 4 – அறிவிப்பு (ஸ்டீவ் கொவிட்)

 செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “மக்கள் மத்தியில் மக்கள்” (people among people) எனும் பிரிவில் அமெரிக்க கவிஞரான ஸ்டீவ் கொவிட்டின் (1938 –2015) “அறிவிப்பு” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது.

“நாம் உணர்வதையே பிறரும் உணரும்படிக்கு மனித உணர்ச்சிகள் பொதுவாய் இருப்பதால், தனித்தன்மையின் பிரிவினை வழியே நம்மை மூடிவைத்துக் கொள்வது தவறு என்பதற்கும் நாம் ஒவ்வொருவரும் நம் சகமனிதரை போன்றவரே என்கிற அறிதலுக்கும் என்ன அர்த்தம்? அதன் பொருள் , தவிர்க்க முடியாத அடிப்படை நியதியான நம் மரணத்தை, அந்த பொது விதியை சிறுதருணத்திலாவது நம்மால் கூர்மையான முறையில் அனுபவத்தில் உணர முடிகிறது என்பதே ஆகும். கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த கவிஞர் ஸ்டீவ் கொவிட், நகைச்சுவையான இந்த தீவிரக் கவிதையில் வசப்படுத்தியிருக்கும் விஷயம் மிக வெளிப்படையானது. ஆனால் அரிதாக மட்டுமே வசப்படுவது.” – செஸ்லா மிலோஷ்


Wednesday, 26 January 2022

ஒளி மின்னும் பொருட்கள் 3 – ஓர் ஏழை மூதாட்டிக்கு (வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ்)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “மக்கள் நடுவே மக்கள்” (people among people)  எனும் பிரிவில் அமெரிக்க நவீனத்துவ கவிஞரான வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸின் (1883 – 1963) “ஓர் ஏழை மூதாட்டிக்கு” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. கார்லோஸ் வில்லியம்ஸ் படிமக் கவிதைகளுக்காக புகழ்பெற்றவர். வெளிப்பாட்டில் நேரடித் தன்மை. உணர்ச்சி மிகாத சிக்கனமான மொழி. ஒற்றை படிமம் வழியே தன் சாரத்தை வெளிப்படுத்துவது. இவற்றை படிமக் கவிதைகளின் பொது குணாம்சங்கள் எனலாம்.  

“வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் அமெரிக்க கவிதையையே மாற்றியமைத்தார் என்று சொல்வது உண்மையான கருத்தே. சமகால பேச்சு மொழியிலிருந்து தனக்குரிய தனி வடிவத்தை அவர் கண்டடைந்தார். அதன் அறிமுகமே அமெரிக்க கவிதையை மாற்றியது. கிட்டத்தட்ட சுவாசத்தின் தாளத்தை அடிப்படையாக கொண்டது அவர் மொழி. அதை விட முக்கியமானது, மக்கள் நடுவே வாழ்வதற்கு கார்லோஸ் வில்லியம்ஸ் கொண்டிருந்த விருப்பம். அந்த குணம் அவருக்கு அளிக்கப்பட்ட கொடை. பரிவுணர்ச்சியின், பச்சாதாபத்தின் அடிப்படையில் அவரை வால்ட் விட்மனின் வாரிசு என்று சொல்லலாம். ஒருவேளை அதனால்தான் தன் பிறப்பிடமான ரூதர்போர்ட், நியூ ஜெர்சியிலேயே மருத்துவராய் பணி புரிய அவர் விரும்பினார் போலும். அவர் எல்லாவற்றையும் பார்க்கக்கூடியவராகவும் கவனிக்கக்கூடியவராகவும் அவதானிப்பவராகவும் இருந்தார். யதார்த்தம் பற்றிய தன் குறிப்புகளை எழுத ஆக எளிமையானச் சொற்களை தேர்வு செய்யவே அவர் எப்போதும் முயன்றார்” - செஸ்லா மிலோஷ்


Monday, 24 January 2022

ஒளி மின்னும் பொருட்கள் 2 – இரண்டு பேரிக்காய்கள் பற்றிய ஆய்வு (வாலேஸ் ஸ்டீவன்ஸ்)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “பொருளின் ரகசியம்” (secret of a thing)  எனும் பிரிவில் அமெரிக்க நவீனத்துவ கவிஞரான வாலேஸ் ஸ்டீவன்ஸின் (1879 – 1955) “இரண்டு பேரிக்காய்கள் பற்றிய ஆய்வு” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது.

“அறிவியல்மீதும், அறிவியல் முறைமைகள்மீதும் பற்றுதல் கொண்டிருந்தவர் வாலேஸ் ஸ்டீவன்ஸ்.  யதார்த்தம் சார்ந்த அவருடைய கவிதைகளில் ஓர் ஆராய்ச்சி பார்வை தென்படுகிறது. ஒரு பொருளை மின்னல் வெட்டில் கைப்பற்ற முயன்ற ஜென் கவிஞர் பாஷோவின் அறிவுரைக்கு நேரெதிரானது இது. இரண்டு பேரிக்காய்களை, ஏதோ வேற்றுலகப் பொருள் போல், விவரிக்க முயற்சிக்கும் ஸ்டீவன்ஸ் அவற்றின் அடிப்படை பண்புகளை ஒவ்வொன்றாக பட்டியலிடுகிறார். ஒரு கியூபிச பாணி ஓவியத்துக்கு நெருக்கமாக தன் ஆராய்ச்சியை முன்வைக்கிறார். எனினும் பேரிக்காய்கள் விவரிக்க முடியாத பொருளாகவே எஞ்சுகின்றன” செஸ்லா மிலோஷ்

வாலேஸ் ஸ்டீவன்ஸ்