Friday, 28 January 2022

ஒளி மின்னும் பொருட்கள் 5 – காட்டு வாத்துகள் (மேரி ஆலிவர்)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில்“இயற்கை” எனும் பிரிவில் அமெரிக்க கவிஞரான மேரி ஆலிவரின் (1935 – 2019) “காட்டு வாத்துகள்” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. இயற்கையை மையப்படுத்தி தன் கவியுலகை சமைத்துக் கொண்டவர் மேரி ஆலிவர்.

“இருபதாம் நூற்றாண்டு இலக்கியத்தில் எண்ணற்று பதிவான மறுப்புவாத (nihilism) அனுபவங்களை பார்க்கையில், இயற்கையுடனான தொடர்பையும் அதன் வழியே மனிதர்கள் உணர்ந்துகொள்ளும் ஞானத்தையும் ஒருவர் பாராட்டாமல் இருக்க முடியாது. இந்த அனுபவங்களுக்கு தர்க்கபூர்வமான விளக்கங்கள் கிடையாது. பிரபஞ்சமயமான ஒரு தாளத்தை உணர்ந்துகொள்வதே இதில் மிக முக்கியமானது. நாமும் அந்த தாளத்தில் ஒரு பகுதியே. அதற்கு நம் ரத்தவோட்டத்துக்கே நாம் நன்றி சொல்ல வேண்டும். மேரி ஆலிவரின் இந்த கவிதையில் நன்மை, தீமை, குற்றவுணர்ச்சி, மனக்கசப்பு எல்லாமே மனித உலகுக்குரியவையாக உள்ளன.  அதற்கப்பால் உள்ள இன்னோர் அகன்ற உலகம் தன் இருப்பையே மானுடத் துயரங்களை கடப்பதற்கான அழைப்பாக மாற்றியிருக்கிறது” - செஸ்லா மிலோஷ்

Mary Oliver

Thursday, 27 January 2022

ஒளி மின்னும் பொருட்கள் 4 – அறிவிப்பு (ஸ்டீவ் கொவிட்)

 செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “மக்கள் மத்தியில் மக்கள்” (people among people) எனும் பிரிவில் அமெரிக்க கவிஞரான ஸ்டீவ் கொவிட்டின் (1938 –2015) “அறிவிப்பு” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது.

“நாம் உணர்வதையே பிறரும் உணரும்படிக்கு மனித உணர்ச்சிகள் பொதுவாய் இருப்பதால், தனித்தன்மையின் பிரிவினை வழியே நம்மை மூடிவைத்துக் கொள்வது தவறு என்பதற்கும் நாம் ஒவ்வொருவரும் நம் சகமனிதரை போன்றவரே என்கிற அறிதலுக்கும் என்ன அர்த்தம்? அதன் பொருள் , தவிர்க்க முடியாத அடிப்படை நியதியான நம் மரணத்தை, அந்த பொது விதியை சிறுதருணத்திலாவது நம்மால் கூர்மையான முறையில் அனுபவத்தில் உணர முடிகிறது என்பதே ஆகும். கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த கவிஞர் ஸ்டீவ் கொவிட், நகைச்சுவையான இந்த தீவிரக் கவிதையில் வசப்படுத்தியிருக்கும் விஷயம் மிக வெளிப்படையானது. ஆனால் அரிதாக மட்டுமே வசப்படுவது.” – செஸ்லா மிலோஷ்


Wednesday, 26 January 2022

ஒளி மின்னும் பொருட்கள் 3 – ஓர் ஏழை மூதாட்டிக்கு (வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ்)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “மக்கள் நடுவே மக்கள்” (people among people)  எனும் பிரிவில் அமெரிக்க நவீனத்துவ கவிஞரான வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸின் (1883 – 1963) “ஓர் ஏழை மூதாட்டிக்கு” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது. கார்லோஸ் வில்லியம்ஸ் படிமக் கவிதைகளுக்காக புகழ்பெற்றவர். வெளிப்பாட்டில் நேரடித் தன்மை. உணர்ச்சி மிகாத சிக்கனமான மொழி. ஒற்றை படிமம் வழியே தன் சாரத்தை வெளிப்படுத்துவது. இவற்றை படிமக் கவிதைகளின் பொது குணாம்சங்கள் எனலாம்.  

“வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ் அமெரிக்க கவிதையையே மாற்றியமைத்தார் என்று சொல்வது உண்மையான கருத்தே. சமகால பேச்சு மொழியிலிருந்து தனக்குரிய தனி வடிவத்தை அவர் கண்டடைந்தார். அதன் அறிமுகமே அமெரிக்க கவிதையை மாற்றியது. கிட்டத்தட்ட சுவாசத்தின் தாளத்தை அடிப்படையாக கொண்டது அவர் மொழி. அதை விட முக்கியமானது, மக்கள் நடுவே வாழ்வதற்கு கார்லோஸ் வில்லியம்ஸ் கொண்டிருந்த விருப்பம். அந்த குணம் அவருக்கு அளிக்கப்பட்ட கொடை. பரிவுணர்ச்சியின், பச்சாதாபத்தின் அடிப்படையில் அவரை வால்ட் விட்மனின் வாரிசு என்று சொல்லலாம். ஒருவேளை அதனால்தான் தன் பிறப்பிடமான ரூதர்போர்ட், நியூ ஜெர்சியிலேயே மருத்துவராய் பணி புரிய அவர் விரும்பினார் போலும். அவர் எல்லாவற்றையும் பார்க்கக்கூடியவராகவும் கவனிக்கக்கூடியவராகவும் அவதானிப்பவராகவும் இருந்தார். யதார்த்தம் பற்றிய தன் குறிப்புகளை எழுத ஆக எளிமையானச் சொற்களை தேர்வு செய்யவே அவர் எப்போதும் முயன்றார்” - செஸ்லா மிலோஷ்


Monday, 24 January 2022

ஒளி மின்னும் பொருட்கள் 2 – இரண்டு பேரிக்காய்கள் பற்றிய ஆய்வு (வாலேஸ் ஸ்டீவன்ஸ்)

செஸ்லா மிலோஷின் “ஒளி மின்னும் பொருட்களின் நூல்” புத்தகத்தில் “பொருளின் ரகசியம்” (secret of a thing)  எனும் பிரிவில் அமெரிக்க நவீனத்துவ கவிஞரான வாலேஸ் ஸ்டீவன்ஸின் (1879 – 1955) “இரண்டு பேரிக்காய்கள் பற்றிய ஆய்வு” கவிதை சேர்க்கப்பட்டுள்ளது.

“அறிவியல்மீதும், அறிவியல் முறைமைகள்மீதும் பற்றுதல் கொண்டிருந்தவர் வாலேஸ் ஸ்டீவன்ஸ்.  யதார்த்தம் சார்ந்த அவருடைய கவிதைகளில் ஓர் ஆராய்ச்சி பார்வை தென்படுகிறது. ஒரு பொருளை மின்னல் வெட்டில் கைப்பற்ற முயன்ற ஜென் கவிஞர் பாஷோவின் அறிவுரைக்கு நேரெதிரானது இது. இரண்டு பேரிக்காய்களை, ஏதோ வேற்றுலகப் பொருள் போல், விவரிக்க முயற்சிக்கும் ஸ்டீவன்ஸ் அவற்றின் அடிப்படை பண்புகளை ஒவ்வொன்றாக பட்டியலிடுகிறார். ஒரு கியூபிச பாணி ஓவியத்துக்கு நெருக்கமாக தன் ஆராய்ச்சியை முன்வைக்கிறார். எனினும் பேரிக்காய்கள் விவரிக்க முடியாத பொருளாகவே எஞ்சுகின்றன” செஸ்லா மிலோஷ்

வாலேஸ் ஸ்டீவன்ஸ்

Sunday, 23 January 2022

ஒளி மின்னும் பொருட்கள் 1 – மேக்சிமஸ் (டி.எச்.லாரன்ஸ்)

ஒளி மின்னும் பொருட்களின் நூல் எனும் தலைப்பில் போலீஷ் அமெரிக்க கவியான செஸ்லா மிலோஷ் (1911 - 2004) வெவ்வேறு உலக மொழிகளில் இருந்து கவிதைகளை தேர்ந்தெடுத்து ஒரே புத்தகமாக தொகுத்து அளித்துள்ளார். ஒவ்வொரு கவிதைக்கும் மிலோஷ் அவர்களே சில வரிகளில் குறிப்பும் கொடுத்திருக்கிறார். செஸ்லா மிலோஷ் 1980ம் ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றவர். மெய் வெளிப்பாடு, பயணம், தருணம், விடைபெறல் என்று பல உபதலைப்புகளில் இக்கவிதைகள் தொகுக்கப்பட்டுள்ளன.

O
மெய் வெளிப்பாடு (epiphany) எனும் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள பிரிட்டிஷ் ஆசிரியர் டி.எச்.லாரன்ஸின் (1885-1930) "மேக்சிமஸ்" கவிதை பற்றிய மிலோஷின் குறிப்பு.

“டி.எச்.லாரன்ஸ் தன் மேக்சிமஸ் கவிதை வழியே பல்வகைப்பட்ட கடவுள்களின் உலகுக்கு திரும்புகிறார். கிரேக்கத் தொன்மமான ஹெர்ம்ஸ் நம்மை நேரில் வந்து சந்திப்பதுப் போன்ற திடுக்கிடலை, அவரை அடையாளம் கண்டுகொண்ட அதிர்ச்சியை இக்கவிதை ஏற்படுத்துகிறது. அந்த அளவுக்கு இக்கவிதை ஆற்றல் மிக்கதாய் உள்ளது. மேக்சிமஸ், ரோமானிய பேரரசர் ஜீலியனின் ஆசிரியராய் இருந்த ஒரு தத்துவவாதி. பண்டைய பாகன் வழிபாட்டு முறையை மறுநிர்மாணம் செய்ய முயன்றதால் நம்பிக்கை பிறழ்ந்தவர் (apostate) என்று அழைக்கப்பட்டார் மேக்சிமஸ்.