Saturday, 27 January 2018

999 வாழ்க்கை

நான் சமீபத்தில் இரண்டு மேற்கோள்களை தனியே குறித்து வைத்துக் கொண்டேன்.

ஒன்று “தத்துவத்தின் கதை” நூலின் முன்னுரையில் வில் டூரண்ட் சொல்வது, “காலம் கடப்பதற்கு முன்னால் பெரிய விஷயங்களை பெரியவை என்றும் சிறிய விஷயங்களை சிறியவை என்றும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்”

இரண்டாவது ஜெயமோகனுடையது, “பெரிய வாழ்க்கைகள் நினைவில் நிறுத்தப்படவேண்டும். அன்றாடமென வந்துசூழும் சிறுமைகளுடன் போரிட அவையே படைக்கலமென்றாகின்றன.”


கடந்த சில மாதங்களாக பெரிய புத்தகங்களுடனே அதிகமாக பொழுது கழிவதாலும் நிறைய பெரிய வார்த்தைகளை கற்றுக்கொள்வதும் மறப்பதும் குழம்புவதுமாக இருப்பதாலும் பெரிய விஷயங்கள், பெரிய மனிதர்கள் என தரைக்கே வராத ஆசைகளோடு அலைவதாலும் இவ்விரண்டு மேற்கோள்களும் என்னில் உடனடியாக பற்றி ஏறிக் கொண்டன என நினைக்கிறேன். எனினும் இந்த பெரியவைகளுக்கு நடுவே நான் அவ்வப்போது உணரும் பயமும் மேற்கொள்ளும் அற்பத்தனங்களும் உண்டு. தலைக்கு மேல் சுழலும் கண்கள் உறங்கும் நேரத்தில் சிறியவைகளின் ஜமாவில் அடைக்கலம் சேர்ந்துக் கொள்வேன். பெரியவை, சிறியவை – இரண்டும் ஒன்றையொன்று பார்த்துவிடாமல் இருக்க, என் இரட்டை வாழ்க்கையை அவை கண்டுபிடித்திடாமல் இருக்க, இரண்டிடமும் எனக்கு ஒரு இரட்டைச் சகோதரன் உண்டு என்று பொய் சொல்லி வைத்திருக்கிறேன். ஒட்டுத் தாடியும் ஒட்டு மீசையும் பையிலேயே எப்போதும் இருக்கின்றன. இன்று அந்த திரைப்படத்தின் உச்சக்காட்சி.