Sunday, 8 September 2024

அறிவைப் பாடுதல்

(ஏ.வி.மணிகண்டனின் காண்பியல் கலை பயிற்சி முகாமை முன்வைத்து)



முழுமையறிவு ஒருங்கிணைத்த நவீன காண்பியல் கலை பயிற்சி முகாமில் சென்ற வார இறுதி (30/08/24 - 01/09/24) கலந்து கொண்டு திரும்பினேன். புகைப்படக் கலைஞரும் கலை திறனாய்வாளருமான நண்பர் ஏ.வி.மணிகண்டன் பயிற்றுவித்தார். மூன்று நாட்கள் தீவிரமான உரைகள் நிகழ்த்தினார். கலந்துரையாடினார்.

இன்று இணையத்தில் சர்வதேச பல்கலைக் கழகங்களில் நடக்கிற வகுப்புகள்- கலைஞர்கள்சிந்தனையாளர்கள் நிகழ்த்துகிற உரைகள் -நமக்கு எளிதாக காணக் கிடைக்கின்றன. அப்படியான எந்த சர்வதேச அரங்குக்கும் குறைவில்லாத தரத்தில் இந்த நிகழ்வு நடந்தது என உறுதியாக சொல்லலாம். கவிதை பற்றிய ஆழமான பேச்சே கவிதையனுபவம் ஆவது போலகலை அறிமுகமும்  கலையனுபவம் ஆக முடியும் என்பதற்கு இந்நிகழ்வு இன்னொரு சான்று.


[ஏ.வி.மணிகண்டன் உரையாற்றுகிறார்]


ஏ.வி.மணிகண்டனின் கட்டுரைகளை தொடர்ந்து வாசிப்பவர்கள் அவருடைய கலைக் கொள்கைகளைவிமர்சன அணுகுமுறைகளை ஏற்கனவே  அறிந்திருப்பார்கள். இந்த வகுப்பு அதன் நீட்சி போலவே அமைந்திருந்தது. அல்லது அக்கட்டுரைகள் இவ்வகுப்பின் முன்னோட்டங்கள் எனலாம். மணியின் இந்த உரைகள் வெறுமனே காண்பியல் கலைஞர்களின்கலையாக்கங்களின் அறிமுகம் மட்டும் அல்ல. மாறாக ஒட்டுமொத்த மேற்கத்திய சமூகக் கலாச்சாரத்தின்வரலாற்றின் அறிமுகம். கலை பரிணாமத்தின் அறிமுகம். கலைக்கும் கலைஞனுக்கும்கலைக்கும் சமூகத்துக்கும்கலைக்கும் தனிமனித அனுபவத்துக்குமான உறவின் நடனத்தின் அறிமுகம். இந்த நிகழ்வின் சிறப்பம்சங்களில் இது முக்கியமானது.