Friday 21 July 2023

"திருவருட்செல்வி" - சிறுகதை நூல் முன்னுரை

 [விஷ்ணுபுரம் பதிப்பகம் வெளியிடும் “திருவருட்செல்வி” நூலின் முன்னுரை]

ஏழு அல்லது எட்டு வயதில் முதல் முறையாக, புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்த நேரத்தில், என்ன வகையான உணர்ச்சி நிலைக்கு ஆட்பட்டேன் என்பதை அடிக்கடி ஞாபகப்படுத்தி பார்ப்பேன். சிறார் நூல்கள் ஒரு பெரிய கனவு வெளியை அப்போது உருவாக்கி கொடுத்தன.  ருஷ்ய நாடோடிக் கதைகள். ஈசாப் நீதிக் கதைகள். மரியாதை ராமன், தெனாலிராமன் கதைகள். மகாபாரதக் கதைகள். விளம்பர பிரசுரங்கள் போன்ற ஓடிசலான புத்தகங்கள் அவை.

அபிமன்யுவின் கதையை ,அப்படியான ஒரு குட்டி நூலில் வாசித்தது, எப்போதும் தொடர்ந்து வரும் ஞாபகமாக இருக்கிறது. அபிமன்யுவின் மரணத்தை வாசித்தபோது, குளிர் போல துயர் என்னில் இறங்கியது. ஆனால் கோபமேயில்லாத துயர். பச்சாதாபமோ முறையீடோக்கூட இல்லை. வெறும் துயர். ஒரு பெரிய கல் யானைப் போல துயர் எதிரே நிறைத்து நின்றிருந்தது. துயர்தானா என்று சந்தேகம் தோற்றுவிக்கும் வகையிலான துயர்.

அபிமன்யுவின் கதையை வாசித்த சிறுவனுக்கு அப்போது என்ன செயலில் ஈடுபட்டிருக்கிறோம் என்பது பற்றி எந்த அறிவும் இருந்திருக்க வாய்ப்பில்லை. அனுபவம் மட்டுமே நிகழ்ந்தது. ஏன் கதைகள் வாசிக்கிறாய் என யாராவது கேட்டிருந்தால் அவனுக்கு பதில் சொல்ல தெரிந்திருக்காது. கதைகளால் என்ன பயன் என்று கேட்டால் அவன் குழம்பியிருப்பான். ஏனென்றால் கதைகளின் நீதியை அவன் ஒருபோதும் சரியாக கவனித்ததில்லை. பேசும் மிருகங்கள் மீதும் கதைகளின் விந்தை மீதுமே அவனுக்கு அக்கறை இருந்தது. ஆனால் அவனிடம் கதைகள் வாசிக்கத்தான் வேண்டுமா என்று கேட்டிருந்தால், மிக உறுதியாக ஆம் என்று பதில் சொல்லியிருப்பான். அது ஒரு முக்கியமான செயல் என்பதில் அவனிடம் வலுவான நம்பிக்கை இருந்தது. இன்றுவரையில் அந்த நம்பிக்கை மாறாமல் இருப்பதே, நான் எழுதுவதற்கான காரணம் என நினைக்கிறேன்.

"திருவருட்செல்வி" - கோவை புத்தக கண்காட்சியில்

 கோவை புத்தக கண்காட்சி இன்று துவங்குகிறது. என்னுடைய சிறுகதை நூலான "திருவருட்செல்வி" விஷ்ணுபுரம் அரங்கில் கிடைக்கும்.